எச்சரிக்கை! கற்றலைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைத்தெறிய வேண்டிய தருணமிது!

எச்சரிக்கை! கற்றலைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைத்தெறிய வேண்டிய தருணமிது!

குழந்தைகளின் கற்றல் பாணி அவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் குணங்களை அடிப்படையாகக் கொண்டு குழந்தைக்கு குழந்தை மாறுபடும் எனும் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

இன்றைக்கு உலகம் முழுவதுமிருக்கும் கல்வி ஆராய்ச்சியாளர்களின் ஒற்றைப் பெரும் போர் எது தெரியுமா? கற்றல் குறித்து காலம் காலமாக நமது சமூகத்தில்  நிலவி வரும் கட்டுக்கதைகளை அடையாளம் கண்டு அவற்றை ஒழித்துக் கட்டுவது ஒன்றே!

இணையமும், சமூக ஊடகங்களும் எப்போதும் மனித வாழ்க்கை, ஆரோக்யம், மற்றும் அரசியல் குறித்த போலியான செய்திகளால் மட்டுமே நிரம்பியவை அல்ல, அவை கல்வி குறித்தும் எப்படிக் கற்பது என்பது குறித்தும் கூட எண்ணற்ற கட்டுக்கதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. கல்வி வடிவமைப்பாளர்கள், கற்றல் குறித்த கொள்கை வகுப்பவர்கள், கல்வித்திட்டம் குறித்து நன்கு அறிந்த கல்வியாளர்கள், உள்ளிட்டோர் இதைப்பற்றிய புரிதலை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது தற்போது, ஏனெனில், கற்றல் திட்டங்கள் வகுப்பதற்காகவும், ஆற்றலுடன் கற்பது எப்படி? என்பது குறித்தும் அறிந்து கொள்ள இன்று அதீதமாக பணமும், நேரமும் செலவளிக்கப்பட்டு வருகின்றது. அத்தனை மெனக்கெடலும் நிஜமானால், அதாவது கற்றல் திறனை மேம்படுத்துவதாக இருந்தால் சரி. ஆனால், அத்தனையும் போலி அறிவியலின் அடிப்படையில் வெறும் வியாபார நிமித்தமாகவும், பயனற்றதாகவும் இருந்தால் நிச்சயம் அதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. 

இன்று மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ளவும், கல்வியில் மேம்படவும் பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளை ஆரம்பக் கல்வி முதற்கொண்டே மேற்கொண்டு வருகிறார்கள். அப்படியிருக்கும் போது எப்படிக் கற்பது? தங்களது கற்றல் வேகத்தை, கற்றம் திறனை மேம்படுத்திக் கொள்வது எப்படி? என்பது குறித்த போலியான அறிவியல் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதென்பது முற்றிலும் மோசமான முன்னுதாரணமாகி விடும். அடுத்து வரும் தலைமுறையும் இதனால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாக நேரும் அபாயமும் இதில் உண்டு. எனவே கற்றல் குறித்த போலி நம்பகங்களை இந்தக் கட்டுரை வாயிலாக நாம் உடைத்தெறிவோம்.

வாழ்க்கையில் ஒருமுறையல்ல பலமுறை கீழ்க்கண்ட வாக்கியங்களை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்;

  • நாம் நமது மொத்த மூளைத் திறனில் வெறும் 10% மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், மீதியுள்ள அத்தனை திறனையும் வீணடிக்கிறோம்.
  • அவரவருக்கு விருப்பமான கற்றல் பாணியில் கற்கும் போது தனிநபர்கள் நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
  • டிஸ்லெக்ஸியாவின் பொதுவான அறிகுறி எழுத்துக்களைப் பின்னோக்கி எழுதுவதும், அப்படியே புரிந்து கொள்வதுமாகும்.
  • நம்மில் சிலருக்கு வலது மூளை திறம்பட செயலாற்றும், சிலருக்கு இடது மூளை திறம்பட செயலாற்றும். பொதுவாக இது கற்றல் வேறுபாடுகளை விளங்கிக் கொள்ள உதவுகிறது. 
  • கர்நாடக சங்கீதம் கேட்கும் பழக்கமுள்ள குழந்தைகளின் பகுத்தறிவுத் திறன் அதிகரிக்கும்.

குழந்தைகளின் கற்றல் பாணி அவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் குணங்களை அடிப்படையாகக் கொண்டு குழந்தைக்கு குழந்தை மாறுபடும் எனும் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

அப்படியெனில் வாருங்கள் கற்றலின் அடிப்படையான உன்னத நியூரோமித் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம். 

கல்வி பற்றி பல தவறான கருத்துக்கள் நம்மிடையே நிலவி வருகின்றன. இதில் கல்வியாளர்கள், கற்பவர்கள், கற்றுக்கொடுப்பவர்கள், அத்துறையில் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், கல்வி ஆய்வாளர்கள் என்று எவரும் விதிவிலக்கில்லை. அவர்களும் கற்றல் குறித்த இப்படியான பல தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கைக்களுடன் தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்றல் தொடர்பான கருத்தரங்குகளில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான் ‘நியூரோமித்’ தொடர்பான பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கான தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கற்றல் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் தங்கள் முடிவுகளை மிகச்சுருக்கமாக முன் வைக்கும் பொருட்டு, ஆழமான ஆராய்ச்சிகளையும், அவற்றின் முடிவுகளையும் கூட பிறரைக் குழப்பும் வண்ணம் மிகச்ச்ருக்கமாகவும், மிக நீண்ட புரிதலுக்கான தேவை கொண்ட முடிச்சுகளாகவும் தீர்வுகளை வெளியிடுகிறார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தெளிவை ஏற்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான தொடக்கங்கள் உண்மையல்லாதவற்றையும் உண்மையாக்கிக் காட்டும் முனைப்பை போலி ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தி விடுகிறது. இப்படியான போலி நம்பிக்கைகளின்பாலான நியூரோமித்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை என்பதை நாம் உணர வேண்டும். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் கற்றல் கொள்கைகள் போலியானவை, அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கல்விக்கூடங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பைத் தந்தாலும் நிச்சயம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்பதை பெற்றோர் உணர வேண்டும். குழந்தையின் போக்கிலேயே சென்று பிறவிலேயே அதற்கென இயற்கையாக அமைந்திருக்கும் கற்றல் திறனின் அடிப்படையில் கல்விக் கற்றுத்தரப்படும் என்பது மாதிரியான வாக்குறுதிகள் பெற்றோரைக் கவரலாம். ஆனால் அவற்றால் நீண்ட காலப் பயன் எப்போதும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.

சரி, இம்மாதிரியான அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி?

சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் மற்றும் அவை கேட்கும் கேள்விகள் எப்போதும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கப்பட்டே ஆக வேண்டும்.

கூகுள் ஸ்கூலரில் ஒரு விஷயத்தைத் தேடும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது நீங்கள் தேடும் தகவல் டாட்.காமில் இருந்து பெறப்பட்டதா அல்லது பலரும் தேடிக் கண்டடைந்த தேடுபொறி மூலத்தில் இருந்து கிடைத்ததா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

எதிர்க்கருத்துக்கான கோரிக்கைகளை இருமுறை சரிபார்க்கவும். வலைத்தளத்தில் இருந்து ஒரு தகவலை அறிகிறீர்கள் என்றால் அதில் முதற்படியாக ‘எங்களைப் பற்றி’ என்றிருக்கும் பகுதியை படியுங்கள்.

அத்துடன் அத்தகவலுக்கான மூல இணையதளம் மற்றும் தகவல் ஆதாரங்களையும் ஒன்றிற்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.

கற்றல் குறித்த தகவலைப் பகிரக்கூடிய மனிதரின் பின்புலம் மற்றும் கற்றலியலில் அவரது நிபுணத்துவம் குறித்தும் ஆராய வேண்டும்.

தகவல் அளிப்பவரின் பாணி, தொனி மற்றும் எழுத்துப்பிழைகளில் முக்கியமாகக் கவனம் செலுத்துங்கள். கற்றல் குறித்த வியத்தகு சிற்றேடு மற்றும் புல்லட்டின் செய்திகள் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.

இறுதியாகக் கல்வியியல் குறித்து அறிந்து கொள்ள முற்படுபவர்கள், பள்ளி மற்றும் கொள்கை அளவில், நியூரோ சயின்ஸ் விஞ்ஞானிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதோடு, அறிவியல் பத்திரிகைகள் வாசிக்கவும் தவறக்கூடாது. இது ஆராய்ச்சிக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியை பாதிப்பதுடன், ஒரு புறநிலை மட்டத்தில் விமர்சன ரீதியாக கேள்விகளை கேட்கவும் உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com