இதைச் சொன்னது யார் தெரியுமா? பாலிவுட் டான் ஷாருக்கானின் அன்பு மனைவி கெளரி கான். கெளரிக்கு இன்டீரியர் டிசைனிங்கில் ஆர்வம் மிகுதி என்பதால் அதை தனது ஹாபியாகவும், தொழிலாகவும் வைத்திருக்கிறார். சமீபத்தில் மும்பையில் ஆலியா ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் ‘அர்த்’ எனப்படும் நவீன உணவகத்துக்கு இன்டீரியர் டிசைனிங் பணிகளை மேற்கொண்டார். அந்த உணவகத்தின் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த சமயத்தில் தான் மேற்கண்ட அந்த வாக்கியத்தை கெளரி சொன்னார். அவர் சொன்னபடி பெரும்பாலான போஜனப் பிரியர்களுக்கு நாவின் ருசி மட்டுமே முக்கியமல்ல, அமர்ந்து உணவருந்தும் இடத்தின் அழகியலும் மிக, மிக முக்கியமே! உணவருந்தும் இடத்தில் எப்போதுமே உணவுக்காக உள்ளே நுழைபவர்களைக் கவர்ந்து இழுக்கும் அம்சங்கள் இருக்க வேண்டும். விசாலமான சாப்பாட்டு அறை, அதில் அளவான, மிதமான வெளிச்சம், சாப்பாட்டுக் கூடத்தின் நடுவே பல பரிமாணங்களில் வெளிச்சத்தை அள்ளி வீசும் பழங்கால சாண்ட்லியர் விளக்குகள். இவை அனைத்தும் சேர்ந்து பரிமாறப்படும் அத்தனை ருசியாக உணவு வகைகளுக்கும் ஒரு புது அழகைத் தரும். உள்ளே நுழைபவர்கள் எவராயினும் நிச்சயம் சாப்பாட்டு அறையின் அழகியலுக்காகவாவது நிச்சயம் எதையாவது உண்ணாமல் வெளியேறவே முடியாது. அது தான் ஒரு நல்ல சாப்பாட்டு அறையின் கச்சிதமான வடிவமைப்புக்கும், அழகுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது. என்கிறார் கெளரி.
இந்த விழாவில் அவரது ஸ்டார் கணவரான ஷாருக்கான், மகன் ஆர்யன், மகள் சுஹானா, நண்பர்களான அனில் கபூர், சோனம் கபூர். அர்ஜூன் கபூர், சங்கி பாண்டே, டைனோ மொரியா, ஸ்வேதா நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கெளரி சொன்னதில், எந்த உணவை உண்பது என்பதில் வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் ‘உணவு எப்போதுமே அருமையான அனுபவமாக இருக்க வேண்டும்’ என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.