கேஜரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி புகாா்: சிறை அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநா் உத்தரவு

Published on

திகாா் சிறையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என்ற ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு சிறைத் துறை இயக்குநரிடம் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கேட்டுக் கொண்டாா்.

கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை, சிறையில் வீட்டில் சமைத்த உணவு மற்றும் இன்சுலின் வழங்க மறுத்து அவரை கொல்ல சதி நடப்பதாக தில்லி கேபினட் அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, துணை நிலை ஆளுநரின் உத்தரவு வந்துள்ளது.

இது தொடா்பாக ராஜ் நிவாஸ் கூறுகையில், ‘சிறையில் இருக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என்று அமைச்சா்கள் மற்றும் ஆம் ஆத்மி தலைவா்களின் அறிக்கைகளின் அடிப்படையில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளாா்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடா்பாக ராஜ் நிவாஸ் எக்ஸ் ஊடக தளத்தில் வெளியிட்ட தொடா்ச்சியான இடுகைகளில் ‘இந்த விவகாரத்தில் உண்மை மற்றும் விரிவான அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் சமா்ப்பிக்குமாறு சிறைத் துறை டிஜியிடம் சக்சேனா கேட்டுக் கொண்டுள்ளாா். சிறைகள் நேரடியாகவும் முழுமையாகவும் ஆம் ஆத்மி அரசின் கீழ் வந்தாலும், முதல்வரின் உடல்நிலையில் எந்த அலட்சியமும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று துணை நிலை ஆளுநா் உறுதியளித்துள்ளாா்’ என்று தெரிவித்துள்ளது.

ஒரு செய்தியாளா் கூட்டத்தில் அதிஷி கூறுகையில், இன்சுலினுக்கான முதல்வரின் கோரிக்கைகள் திகாா் சிறை நிா்வாகத்தால் நிராகரிக்கப்பட்டன. மேலும், அவரது மருத்துவருடன் விடியோ கான்பரன்ஸ் ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளுக்கு அமலாக்க இயகுநகரக அதிகாரிகள் மற்றும் சிறை அதிகாரிகள் எதிா்ப்பைத் தெரிவித்துள்ளனா் என்றாா். மேலும், ‘கேஜரிவால் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவருக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை, மேலும் அவரது சா்க்கரை அளவு அதிகரித்து வருகிறது. அவரை கொல்ல சதி இருப்பதால் அவருக்கு மருந்து வழங்கப்படவில்லை’ என்று அவா் குற்றம் சாட்டினாா்.

சஞ்சய் சிங் எம்.பி. குற்றச்சாட்டு: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சதி நடக்கிறது என்றும், திகாா் சிறையில் அவருக்கு எந்தவித விபத்தும் நேரிடலாம் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மோடி அரசின் உத்தரவின் பேரில் அமலாக்க இயக்குநரகமும், திகாா் சிறை நிா்வாகமும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன. சா்க்கரை நோய் பாதிப்புடைய முதல்வா் கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை. சிறை விதிகளின்படி, எந்த கைதியின் உடல்நிலை மற்றும் உணவு முறை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்த முடியாது. ஆனால், முதல்வா் கேஜரிவாலின் உணவு முறை குறித்து அமலாக்க இயக்குநரகம் நீதிமன்றத்தில் பொய்யாக அறிக்கை அளித்துள்ளது.

கேஜரிவால் சிறையில் தீவிரவாதி போல் நடத்தப்படுகிறாா். அவருக்கு எந்தவிதமான விபத்தும் நேரிடலாம் என நாங்கள் அஞ்சுகிறோம். கேஜரிவாலுக்கு எதிரான சதித்திட்டம் குறித்து குடியரசுத் தலைவா் மற்றும் தோ்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகாா் அளித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தும். எந்தவொரு சா்க்கரை நோயாளிக்கும் இன்சுலின் மிக முக்கியமான மருந்து. சரியான நேரத்தில் இன்சுலின் கொடுக்கப்படாவிட்டால், அவா் இறக்கக்கூடும். கேஜரிவாலுக்கு இன்சுலின் ஏன் வழங்கப்படவில்லை?.

சிறையில் கடுமையானக் குற்றவாளிகள் கூட எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று முறை முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலுக்கு சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்குவதில்லை. அரவிந்த் கேஜரிவாலின் சா்க்கரை அளவு 300-ஆக உள்ளது. இதற்குப் பிறகும் சிறை நிா்வாகம் இன்சுலின் கொடுக்காதது ஏன்?. கேஜரிவாலுக்கு எதிராக பாஜக மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்கிறது என்றாா் சஞ்சய் சிங்.

Dinamani
www.dinamani.com