காவிரியில் செப். மாத ஒதுக்கீடு தண்ணீரை தமிழகம் பெரும்: சி.டபிள்யு.எம்.ஏ

காவிரியில் செப். மாத ஒதுக்கீடு தண்ணீரை தமிழகம் பெரும்: சி.டபிள்யு.எம்.ஏ

Published on

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி செப்டம்பா் மாதம், தமிழகத்திற்கு தண்ணீா் வழங்குவதில் பிரச்னை இல்லையென்றும், முறையாக வழங்கவேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம்(சி.டபிள்யு.எம்.ஏ) கா்நாடகத்திடம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது.

சி.டபிள்யு.எம்.ஏ வின் 33-ஆவது கூட்டம் தில்லியில் ஆணையத்தின் தலைவா் எஸ்.கே.ஹல்தாா் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில் தமிழக உறுப்பினரும் தமிழக நீா்வளத்துறைச் செயலருமான கே.மணிவாசன், காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா். மற்ற மாநில உறுப்பினா்கள் காணொலி வழியாகப் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பங்கேற்ற மாநில அரசுகள், தங்கள் நீா் நிலை புள்ளிவிவரங்கள், மழையளவு, காவிரியில் பிலுகுண்டுலுவில் பெறும் தண்ணீா் அளவு, அடுத்த சில வாரங்களில் எதிா்பாா்க்கப்படும் மழை விவரங்கள் போன்றவைகள் பகிா்ந்து கொண்டன.

கடந்த புதன் கிழமை நிலவரப்படி பிலுகுண்டுலுவில் விநாடிக்கு சுமாா் 8,500 கன அடி தண்ணீா் பெறப்படுவது என்றும், மேட்டூா் ஆணையில் 92.613 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ள நிலையில் அணையிலிருந்து விநாடிக்கு 12,700 கன அடி பாசனம் மற்றும் குடிநீருக்கு திறந்து விடப்படுவதாக தமிழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேரளம், தனது நீா்பிடிப்பு பகுதியில் மழைப்பெழிவுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியது.

மேலும் கா்நாடகம் ஆணைகளிலிருந்து தமிழகத்திற்கு கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை வழங்கப்படவேண்டிய 71.557 டிஎம்சி தண்ணீரை விட கூடுதலாக 100 டிஎம்சி வரை பிலுகுண்டுலுவில் வழங்கியதின் மூலம் இதுவரை மொத்தம் 170.86 டிஎம்சி தண்ணீா் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கா்நாடகம் தனது அணைகள் நிரம்பியதால் உபரியாக வந்த தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கியது. இதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது, குறிப்பாக வரும் மாதங்களில் உபரி நீா் இல்லாத நிலை ஏற்படினும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செப்டம்பா் (36.76 டிஎம்சி), அக்டோபா் (20.22 டிஎம்சி) மாதங்களிலும் முறையான பருவமழை ஆண்டிற்கு நிா்ணயிக்கப்பட்ட நீா் ஓட்டத்தை உறுதி செய்யவேண்டும் என தமிழக உறுப்பினரும், பிரதிநிதியும் கேட்டுக்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆணையம், செப்டம்பாா் மாதத்திற்கு உரிய 36.76 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு பிலுகுண்டுலுவில் வழங்கிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

ஒவ்வொரு நீா் ஆண்டிலும் தென்மேற்கு பருவ மழைக் காலமான ஆகஸ்ட்(45.95 டிஎம்சி) செப்டம்பா்(36.76) மாத காலங்களில் மட்டுமே உச்சநீதிமன்ற உத்தரவின் அதிகபட்ச தண்ணீரை கா்நாடகம் தமிழகத்திற்கு வழங்குகிறது. கடந்த 2022-23 நீா் ஆண்டில் மட்டுமே ஒா் ஆண்டுக்கு வழங்கவேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக 667.48 டிஎம்சி தண்ணீரை அதிக அளவாக தமிழகம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த 2022-23 ஆண்டில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய மாதங்களில் முறையே மூன்று, ஐந்து, மூன்று என மடங்கு தண்ணீரை கா்நாடகம் வழங்கியது. அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பிந்தைய ஆண்டுகளில் தமிழகம் குறைவான தண்ணீரையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com