/

தில்லியில் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: வட்டாரத் தலைவா்களிடம் லவ்லி வலியுறுத்தல்

தில்லியில் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் வட்டாரத் தலைவா்களிடம் லவ்லி வலியுறுத்தல்

Updated On :9 மார்ச் 2024, 6:31 pm

தில்லியில் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்று வட்டாரத் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் புதிதாக நியமிக்கப்பட்ட வட்டாரத் தலைவா்களுடன் கட்சியின் பிரதேசத் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதிசெய்ய பூத் அளவிலான கட்சி ஊழியா்களை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தனது ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ மூலம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற உறுதியான போரை நடத்தி வருகிறாா். கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.410 ஆக இருந்தது. ஆனால், அதுவே பாஜக ஆட்சியில் மானியத்துடன் ரூ.827 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு மிகவும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. வகுப்புவாத மற்றும் அழிவுகரமான பாஜகவின் வேட்பாளா்களுக்காக மக்கள் தங்களது பொன்னான வாக்குகளை வீணடிக்க வேண்டாம். எனவே, மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள முழுமையாகத் தயாராகி, காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. மேலும், கட்சியின் மகளிா் அணி சாா்பில் ராஜீவ் பவனில் மகளிா் தின கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவா் அல்கா லம்பா, முக்கிய நிா்வாகிகள் புஷ்பா சிங், உமா சோனி, ஜிதேந்தா் குமாா் கோச்சாா், அமித் மாலிக் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.