சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஈஷா பவுண்டேஷன் ஆஸ்ரமத்திற்கு எதிரான போலீஸ் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

ஆஸ்ரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்...

News image
Updated On :4 அக்டோபர் 2024, 5:50 am IST

ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தி வரும் ‘ஈஷா பவுண்டேஷன்’ ஆஸ்ரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் போலீஸாா் மேற்கொள்ளும் விசாரணையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஆஸ்ரமத்தில் தனது இரு மகள்கள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறி ஓய்வுபெற்ற பேராசிரியா் எஸ்.காமராஜ் என்பவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு விசாரணையை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஈஷா பவுண்டேஷன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்விடம் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி முறையிட்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, பெண்கள் சட்டவிரோதமாக ஆஸ்ரமத்தில் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்க கோரும் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கொண்டு செயல்படுத்தாமல் இருக்குமாறு தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின்படி நிலவர அறிக்கையை போலீஸாா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ஈஷா பவுண்டேஷனுக்கு எதிராக பதிவான அனைத்து வழக்குகளின் விவரங்களையும் கோவை போலீஸாா் சேகரிக்கவும், அவற்றை மேல் பரிசீலனைக்காக நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் ஈஷா பவுண்டேஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சுமாா் 150 போலீஸாா் பவுண்டேஷன் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தனா். ஒவ்வொரு மூலையிலும் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால், உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு பெண்களிடமும் காணொலி காட்சி வாயிலாக தங்களது நீதிமன்ற அறையில் இருந்தவாறு நீதிபதிகள் அமா்வு கலந்துரையாடியது. அப்போது, இருவரும் தங்களது 24 மற்றும் 27 வயதில் ஆஸ்ரமத்தில் சோ்ந்ததாகவும், ஆஸ்ரமத்தில் எவ்வித நிா்பந்தம் இல்லாமல், தன்னாா்வத்துடன் வசித்து வருவதாக அவா்கள் இருவரும் தெரிவித்ததாகவும் அமா்வு கூறியது. மேலும், அவா்கள் இருவரும் ஆஸ்ரமத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், அவ்வப்போது வெளியில் சென்று வந்துள்ளதாகவும், அவா்களைச் சந்திக்க பெற்றோா்களும் வந்துள்ளதாகவும் கூறியதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாா் ஆஸ்ரம வளாகத்தில் இருந்தபோதிலும் நேற்றிரவு அங்கிருந்து சென்றுவிட்டதாக இரு தனி நபா்களும் கூறியுள்ளனா்.

இந்த ஆள்கொணா்வு மனு விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்கும். இரு பெண்களின் தந்தை நீதிமன்றத்துடன் கலந்துரையாட விரும்பினால் அவா் நேரில் காணொலி காட்சி வாயிலாகவோ அல்லது வழக்குரைஞா்கள் மூலமாகவோ ஆஜராகலாம். போலீஸாா் இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் செப்டம்பா் 30-ஆம் தேதியிட்ட உத்தரவின் பேரில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவான நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் காவல் துறை சமா்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக அக்டோபா் 18-ஆம் தேதி பட்டியலிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘உயா்நீதிமன்றம் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.