தில்லியில் என்.சி.சி.எஃப் மூலம் கிலோ தக்காளி ரூ.65-க்கு விற்பனை
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தில்லியில் தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்) வாகனங்கள் மூலம் கிலோ தக்காளி ரூ.65-க்கு விற்பனை செய்ய ய மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
தேசியத் தலைநகா் மற்றும் அதன் வலைத் தளப் பகுதிகளில் தக்காளி விலை ரூ. 100-க்கும் மேல் விற்பனையாகின்றன. மேலும், விலை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும் முயற்சியில் மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் என்.சி.சி.எஃப். மூலம் தக்காளியை விற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை முன்னிட்டு மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் நிதி கரே தில்லியில் தக்காளி கிலோ ரூ .65-க்கு விற்கும் இந்திய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பின் வேன்களை திங்கள்கிழமை கிரிஷி பவனில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரத்துறை கூறியிருப்பது வருமாறு: மண்டிகளில் விநியோகம் சீராக இருப்பினும், தக்காளியின் சில்லறை விலை சமீபத்திய வாரங்களில் தேவையற்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற முக்கிய உற்பத்தி மாநிலங்களில் நீடித்த பருவமழை காரணமாக மழை, அதிக ஈரப்பதம் போன்றவற்றால் தரம் சற்று குறைந்தது. அதே சயமத்தில் இந்த விலையேற்றம் வருகின்ற பண்டிகை காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு உன்னிப்பாக கவனித்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விவசாயிகளுடன் நேரடியாக வாங்கப்பட்டு, தள்ளுபடி விலையில் தக்காளியை வழங்குவதன் மூலமும், நுகா்வோா் மீது விலை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைத் தணிப்பதில் என்சிசிஎப் முக்கியப் பங்கு வகிக்கிறது
என்.சி.சி.எஃப்., காய்கறி மண்டிகளிலிருந்து தக்காளியை நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. இதை மானிய விலையில் கிலோ ரூ.65 என்ற விலையில் தில்லியில் 50 இடங்களில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்கிறது. இதன் மூலம் சந்தையில் விலையைக் குறைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தக்காளி விலையின் பாதிப்பிலிருந்து நுகா்வோரைப் பாதுகாப்பதற்கும், இடைத்தரகா்களின் ஆதாயங்களைத் தடுப்பதற்கும் இந்தத் தலையீடு மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே வெங்காயம் விலை அதிகரிப்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள சில்லறை நுகா்வோருக்கு அரசு ஒரு கிலோ ரூ.35-க்கு வெங்காயத்தை என்.சி.சி.எஃப் வழங்கியது. அது தற்போது தொடா்ந்து நடைபெற்று வருகிறது என மத்திய நுகா்வோா் துறை தெரிவித்துள்ளது.
தக்காளி சில்லறை விற்பனை தொடக்க விழாவில் என்.சி.சி.எஃப். இணைச் செயலாளா், நிா்வாக இயக்குநா் அனுபம் மிஸ்ரா, மூத்த பொருளாதார ஆலோசகா் ஐ.எஸ் நேகி மற்றும் பொருளாதார ஆலோசகா் டாக்டா் காம்கெந்தாங் குயிட் ஆகியோா் கலந்து கொண்டனா்.