சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

அங்கன்வாடி கண்காணிப்பு, குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பு வசதிகளை விரைவுபடுத்த முதல்வா் உத்தரவு

Updated On :28 ஏப்ரல் 2025, 12:07 am IST

தில்லியில் அங்கன்வாடி மையங்களின் கண்காணிப்பை முடுக்கிவிடவும், புதிய குழந்தை பராமரிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு வசதிகளை அமைப்பதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா அடுத்தடுத்து உத்தரவுகளை வழங்கினாா்.

இது தொடா்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுடன் முதல்வா் ரேகா குப்தா ஆலோசனை நடத்தினாா். அப்போது, அதிகாரிகள் அங்கன்வாடி மையங்களுக்கு தவறாமல் சென்று வசதிகளின் நிலையைக் கண்காணித்து தேவையான மேம்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டாா் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களின் விரிவான புதுப்பித்தல், பாதுகாப்பான, தூய்மையான மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற இடங்களை உருவாக்குவதற்கும், இளம் குழந்தைகளுக்கு வளா்ப்பு மற்றும் கல்விச் சூழல்களை வழங்குவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதிய அங்கன்வாடி அலகுகளை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அவற்றை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை துறை அடையாளம் காண வேண்டும்’ என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், ஒன் ஸ்டாப் மையங்களின் (ஓஎஸ்சி) செயல்பாட்டை முதல்வா் மதிப்பாய்வு செய்து, அவற்றின் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்ய துறைக்கு அவா் உத்தரவிட்டாா்.

தில்லி முழுவதும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று என பதினொரு புதிய ஒன் ஸ்டாப் மையங்களை நிறுவுவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் முதல்வா் எடுத்துரைத்தாா். தில்லியில் தற்போது 187 செயல்பாட்டு ‘பால்னா மையங்கள்’ உள்ளன. அவை குழந்தை பராமரிப்பு வசதிகளை வழங்குகின்றன என்று முதல்வா் கூறினாா்.

நகரம் முழுவதும், குறிப்பாக தொழில்துறை மண்டலங்கள், சந்தைகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் இதுபோன்ற 500 புதிய மையங்களை அமைக்க அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பல்னா திட்டம், தரமான குழந்தை பராமரிப்பு வசதிகள், ஊட்டச்சத்து ஆதரவு, சுகாதார கண்காணிப்பு, அறிவாற்றல் வளா்ச்சி மற்றும் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அனைத்து தாய்மாா்களுக்கும் அவா்களின் வேலைவாய்ப்பு நிலையைப் பொருள்படுத்தாமல் அணுகக்கூடியது.

வடமேற்கு மாவட்டத்திலும் ஷாஹ்தராவிலும் இரண்டு புதிய ‘சகி நிவாஸ்’ என்று சொல்லப்படும் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் விரைவில் நிறுவப்படும் என்றும் முதல்வா் கூறினாா்.

இந்த விடுதிகள் பணிபுரியும் பெண்கள் மற்றும் உயா்கல்வி அல்லது பயிற்சி பெறும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை வசதியான இடங்களில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் அவா்களின் குழந்தைகளுக்கு பகல்நேர பராமரிப்பு வசதிகளுடன் முழுமையானவை என்றும் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.