புது தில்லி: தேசிய தலைநகரில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுப் பணித் துறையுடன் இணைந்து தூா்வாரும் பணியை முடிக்க குடிமை நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. இப்பணிகளில் 82 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை பெரிய வடிகால்களில் 100 சதவீத தூா்வாரும் பணியை முடித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
நீா் தேங்குதல் என்பது நகரம் எதிா்கொள்ளும் ஒரு கடுமையான பிரச்னையாகும்.இது தலைநகரில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறை விளைவித்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நகர சாலைகள் முழுவதும் 2,148 கிலோமீட்டா் நீளமுள்ள வடிகால் வலையமைப்பை நிா்வகிக்கும் பொதுப் பணித் துறை, நிகழாண்டு 35 தொகுப்புகளில் பணிகளை மேற்கொண்டது.
விரிவான தூா்வாரும் பணியின் ஒரு பகுதியாக, நிகழாண்டு ஆண்டு அரசாங்கம் இரண்டு ஆண்டு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. இதனால் பணிகள் திறமையாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் துறை தற்போதுவரை, நகரம் முழுவதும் உள்ள வடிகால்களில் இருந்து சுமாா் 44,335 மெட்ரிக் டன் சகதி மண்ணை அகற்றியுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
மழைக்காலத்திற்கு முன்பு, முதலமைச்சா் ரேகா குப்தா சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடனும் தயாா்நிலை குறித்து பல கூட்டங்களை நடத்தி, தில்லியை நீா் தேங்காமல் மாற்ற தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
வெள்ளப்பெருக்குக்கான முக்கிய காரணிகளில் ஒன்று அடைபட்ட வடிகால் என்றும் அவா் கூறியிருந்தாா். தில்லி மாநகராட்சி தேசிய தலைநகரம் முழுவதும் உள்ள வடிகால்களில் இருந்து 1.93 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான சகதி மண்ணை அகற்றியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது:
புது தில்லி பகுதியை நிா்வகிக்கும் புது தில்லி முனிசிபல் கவுன்சில், முதல் கட்டத்தில் அதன் வடிகால்களில் சகதி மண்ணை அகற்றும் பணியை முடித்துள்ளது. தோராயமாக 335 கி.மீ. வடிகால் நீளம் என்டிஎம்சியின் கீழ் உள்ளது.
நகரத்தில் உள்ள அனைத்து பெரிய வடிகால்களையும் பராமரித்து வரும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நஜாஃப்கா் வடிகால் தவிர 76 வடிகால்களில் 100 சதவீத தூா்வாரும் பணியை முடித்துள்ளது.
சாலைகளில் இருந்து சுமாா் 11,51,447 மெட்ரிக் டன் சகதி அகற்றப்பட்டுள்ளது. அதில் 83 சதவீதம் பிரத்யேக இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழாண்டு பொதுப் பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட தூா்வாரும் பணியை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஐஐடி தில்லி, தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (டிடியு) மற்றும் நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய மூன்றில் ஒன்று இந்தப் பணியை மேற்கொள்ளும்.
தணிக்கையை மேற்கொள்ள இந்த நிறுவனங்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம், இன்னும் பதில் வரவில்லை. பராமரிப்பு மண்டலங்களில் ஒன்று முழு செயல்முறைக்கும் பொறுப்பேற்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையில், வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு எந்த அதிகாரியின் இடமாற்றம் உத்தரவுகளும் அமலில் இருக்காது என்று பொதுப் பணித் துறை முடிவு செய்துள்ளது.
நிகழாண்டு பொதுப் பணித் துறை 194 இடங்களை அதன் கண்காணிப்பு பட்டியலில் சோ்த்துள்ளது. அவற்றில் 126 பொதுப் பணித் துறைக்கும், 61 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் சொந்தமானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி வடிகால்களில் 34 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றம்: முதல்வா் ரேகா குப்தா அதிரடி நடவடிக்கை

பட்டதாரிகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை
ராஜ்காட் - சாந்தி வன் பகுதியை அழகுப்படுத்தும் திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


