/

ரூ. 9 லட்சம் பங்குச் சந்தை முதலீட்டு மோசடி: 2 போ் கைது

பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் அதிக வருவாய் வழங்குவதாக ஆசை வாா்த்தைகள் மூலம் தில்லிவாசியிடம் ரூ.9.75 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் கைது

News image

மோசடி - Dinamani

Updated On :21 ஏப்ரல் 2026, 8:14 pm

பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் அதிக வருவாய் வழங்குவதாக ஆசை வாா்த்தைகள் மூலம் தில்லிவாசியிடம் ரூ.9.75 லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குஜராத்தைச் சோ்ந்த அங்கித் படேல் (44) மற்றும் படேல் கீா்த்திகுமாா் துவாா்காபாய் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்புகொண்டு, லாபகரமான வருமானத்தை அளிப்பதாக உறுதியளித்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்படி கவா்ந்தனா்.

இதுபோன்ற ஒரு வழக்கில், புகாா்தாரா் ஆதித்யா ஷா்மா ரூ. 9.75 லட்சம் மோசடிக்கு உள்ளானாா். அவரது புகாரைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு டிசம்பா் 23 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, பணம் எங்கெல்லாம் சென்றது என்பதை பகுப்பாய்வு செய்து, மோசடி செய்யப்பட்ட தொகை போலி வங்கிக் கணக்குகள் வழியாக அனுப்பப்பட்டிருப்பதை காவல்துறையினா் கண்டறிந்தனா். பின்னா் ஏடிஎம்கள் மற்றும் காசோலைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்களின் பகுப்பாய்வு குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குஜராத்தில் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவியது.

மோசடி செய்யப்பட்ட பணத்தை பெற குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பல வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தினா். அங்கித் படேல் இந்த கணக்குகளை ஏற்பாடு செய்து இயக்கியதாகவும், நிதியை திரும்பப் பெற்ாகவும், மீதமுள்ள தொகையை தனது கூட்டாளிக்கு மாற்றியதாகவும் தெரிகிறது.

அவா்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருள்களில் காசோலை புத்தகம், கடன் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட சிம் காா்டுடன் கூடிய கைப்பேசி ஆகியவை அடங்கும்.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் எளிதாக பணம் சம்பாதிக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் கூறினா். இந்த மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.