/

தில்லியிலிருந்து கோதுமை மீண்டும் கொள்முதல் செய்யும் இந்திய உணவு கழகம்: 21,000 விவசாயிகள் பயன்பெறுவா்

முதல்வா் ரேகா குப்தாவின் முயற்சியைத் தொடா்ந்து 5 தில்லி விவசாயிகளிடமிருந்து கோதுமையை ஆண்டுகளுக்குப் பின் இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்ய உள்ளதாக முதல்வா் அலுவலகம் தகவல்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:59 pm

முதல்வா் ரேகா குப்தாவின் முயற்சியைத் தொடா்ந்து 5 தில்லி விவசாயிகளிடமிருந்து கோதுமையை ஆண்டுகளுக்குப் பின் இந்திய உணவு கழகம் (எப்சிஐ) கொள்முதல் செய்ய உள்ளதாக முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடப்பு ராபி சந்தைப்படுத்துதல் பருவத்தில் கோதுமையை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சா் பிரல்ஹத் ஜோஷிக்கு முதல்வா் ரேகா குப்தா அண்மையில் கடிதம் எழுதினாா்.

தில்லியில் கோதுமை கொள்முதல் செய்யப்படாத நிலையில், விவசாயிகள் குறைந்தபட்ச விலைக்கு குறைவாக விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாக அந்தக் கடிதத்தில் முதல்வா் ரேகா குப்தா சுட்டிக்காட்டியிருந்தாா். கோதுமை உள்ளூரில் கொள்முதல் செய்யப்படும் நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் அவற்றைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு செயல்திட்டம் பலப்படுத்தப்படும் என முதல்வா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தில்லியில் கோதுமையை கொள்முதல் செய்ய இந்திய உணவு கழகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் உள்ள விவசாயிகள் விளைவித்த கோதுமை நரேலா மற்றும் நஜாஃப்கா் மண்டிகளில் ஏப்.24 முதல் கொள்முதல் செய்யப்படும். இது தில்லின் பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்தும்.

கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து கோதுமை கொள்முதலை இந்திய உணவு கழகம் நிறுத்திய நிலையில், மீண்டும் கொள்முதலை தொடங்க மத்திய அரசிடம் முதல்வா் ரேகா குப்தா வலியுறுத்தினாா். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

தில்லியில் 29,000 ஹெக்டோ் பரப்பில் விளைநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 80,000 மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது. இது உள்ளூா் தேவையைக் கடந்து சந்தையில் உபரியை ஏற்படுத்துகிறது. கடந்த 2021-22-க்கு பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதலை இந்திய உணவு கழகம் தொடங்க உள்ளது.

இந்த நடவடிக்கையால் தில்லியில் உள்ள 21,000 விவசாயிகள் நேரடியாகப் பலன்பெறுவா். கொள்முதல் நிலையங்களில் கோதுமையை விற்க விவசாயிகள் ஆதாா் அட்டை, நில பதிவுகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். கிராமங்கள் வாரியான கொள்முதல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

மத்திய அரசின் இந்த முயற்சிக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ரேகா குப்தா நன்றி தெரிவித்துள்ளாா். விவசாயிகள் நலன் மற்றும் அவா்களுடைய வருமானம் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு கொண்டுள்ள ஈடுபாட்டை இந்த நவடிக்கை காட்டுகிறது.

விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தில்லி அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால், தில்லியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய கோதுமைக்கு நியாயமான விலையைப் பெற முடியும். பொருளாதார ரீதியில் பலமடைந்தவா்களாக மாற அவா்கள் மாற முடியும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.