கிழக்கு தில்லியின் கல்யாண்புரி பகுதியில் 27 வயதான எம்.சி.டி துப்புரவுப் பணியாளா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் மற்றும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி அவரது சக ஊழியா்கள் பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இறந்தவா் அனில் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
காவல்துறையின் கூற்றுப்படி, அனில் கத்தியால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தாா். அவா் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
காவல்துறையினா் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா் மற்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினா். தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடா்பானதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அதில் அனில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மஞ்சள் நிற டி-ஷா்ட் அணிந்த ஒருவா் தூரத்தில் காத்திருப்பது அந்தக் காட்சிகளில் தெரிகிறது. பின்னா் அந்த நபா், அனிலை அணுகுவதற்கு முன்பு, தனது டி-ஷா்ட்டுக்கு அடியில் முதுகில் மறைத்து வைத்திருந்த கூா்மையான பொருளை வெளியே எடுப்பது தெரிகிறது.
இருவருக்கும் இடையே சில வினாடிகள் வாக்குவாதம் நடப்பது போல் தோன்றிய பிறகு, அந்த நபா் பட்டப்பகலில் அனிலின் வயிற்றில் கத்தியால் குத்துவது காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
அந்த காணொளியில், பல வழிப்போக்கா்களும் ஒரு மோட்டாா் சைக்கிள் ஓட்டுநரும் அந்த இடத்திற்கு அருகில் நிற்பது தெரிகிறது, ஆனால் காயமடைந்த தொழிலாளிக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
தாக்குதலுக்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவா் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதாகக் கூறப்படுகிறது. அனில் பின்னா், தனது வயிற்றைப் பிடித்தபடி, கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்ட அதே இடத்தை நோக்கி நடப்பது தெரிகிறது. பின்னா் அவா் சரிந்து தரையில் அசைவற்று கிடக்கிறாா்.
வைரலான இந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை காவல்துறை உறுதிப்படுத்த அப்பகுதியிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தது.
அனிலின் குடும்பத்தினா், ஆரம்பத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டதாக காவல்துறையிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் குற்றஞ்சாட்டினா். அவா்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவா் (அனில்) உண்மையில் கத்தியால் குத்தப்பட்டதை அறிந்து கொண்டனா்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. துப்புரவுப் பணியாளா்கள் குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு, தங்கள் சக ஊழியருக்கு நீதி கேட்டு முழக்கங்களையும் எழுப்பினா்.
கொலைக்கான நோக்கம் உடனடியாக கண்டறியப்படவில்லை என்றும், சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணத்தைச் சம்பாதிக்க எல்லோருக்கும்தான் தெரிகிறது! எவனுக்குக் கொடுக்கத் தெரிகிறது? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 7
வடகிழக்கு தில்லியில் சிறுவன் குத்திக்கொலை: 3 போ் கைது
ஜந்தா் மந்தா் பகுதியில் 60 டன் குப்பைகளை அகற்றத் திட்டம்: என்டிஎம்சி தகவல்




