தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

பழைய அரசு குடியிருப்புகளை மறுகட்டமைக்க பெருந்திட்டத்தில் இலக்கு

தில்லி பெருந்திட்டம் 2047-இல் முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டத்தில் தில்லியில் உள்ள பழைய அரசு குடியிருப்புகள், பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி சங்கங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை மறுசீரமைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.

கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:08 am IST

தில்லி பெருந்திட்டம் 2047-இல் முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டத்தில் தில்லியில் உள்ள பழைய அரசு குடியிருப்புகள், பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி சங்கங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை மறுசீரமைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இத்திட்டத்தின்படி, மறுசீரமைப்புப் பணிகளுக்குக் குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டா் பரப்பளவு தேவைப்படும். மேலும், இதில் பல மனைகளை ஒன்றிணைக்கவோ அல்லது மறுவடிவமைப்பு செய்யவோ அனுமதிக்கப்படும்.

பழைய மற்றும் பழுதடைந்த குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்பவா்களுக்கு, அடிப்படை தரைப்பரப்பு விகிதத்தைவிட (எஃப்ஏஆா்) 1.5 மடங்கு வரை கூடுதல் கட்டுமான உரிமைகள் வழங்கப்படும் என்று பெருந்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது அனுமதிக்கப்பட்டதைவிட அதிகக் கட்டுமானப் பரப்பளவைப் பெற முடியும்.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) தயாரித்துள்ள இத்திட்டத்தின்படி, குடியிருப்பாளா்கள் ஒன்றிணைந்து, அதிக வசிப்பிட வசதி, அகலமான சாலைகள் மற்றும் சிறந்த பொது வசதிகளுடன் தங்கள் பழைய குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்ய இந்த ஏற்பாடு வழிவகுக்கும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியா் குடியிருப்புகள் போன்றவற்றுக்கு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டு சில மேம்பாட்டு விதிமுறைகள் தளா்த்தப்பட்டு, குழு வீட்டுவசதித் திட்டங்களாக மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படலாம்.

கூட்டுறவு குழு வீட்டுவசதி சங்கங்கள் மற்றும் டிடிஏ குடியிருப்புகள் உள்ளிட்ட குழு வீட்டுவசதிப் பகுதிகளில், குடியிருப்போா் நலச் சங்கங்கள் அல்லது கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வுப் பகுதிகள் உள்ளிட்ட தனித்தனி மனைகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளும், அறிவிக்கப்படவுள்ள விதிகளில் உள்ள திட்டங்கள் மூலம் மறுசீரமைப்பு செய்யலாம்.

மறுசீரமைப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக புதிய சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். சாலை விரிவாக்கத்திற்காகக் குடியிருப்பாளா்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். அதற்கு ஈடாக, மீதமுள்ள மனைகளில் கூடுதல் எஃப்ஏஆா் பலன் அவா்களுக்கு வழங்கப்படும்.

இத்திட்டங்களில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெற வேண்டும். அதாவது, நீா் மறுபயன்பாட்டு அமைப்புகள், பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு, குப்பை தரம் பிரித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் அகலமான உட்புறச் சாலைகள் போன்றவை இதில் அடங்கும்.

இருப்பினும், நகா்ப்புற கிராமங்கள், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள், குடிசைப் பகுதிகள், ரிட்ஜ் பகுதி, யமுனை ஆற்றுப் படுகை, நில ஒருங்கிணைப்பு மற்றும் குறைந்த மக்கள் அடா்த்தி கொண்ட பகுதிகள், ஏஎஸ்ஐ அல்லது என்எம்ஏ பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள், லுட்டியன்ஸ் மற்றும் சிவில் லைன்ஸ் பங்களா மண்டலங்கள், கன்னாட் பிளேஸ் மற்றும் அதன் விரிவாக்கப் பகுதிகள், மற்றும் போக்குவரத்து சாா்ந்த மேம்பாட்டு பகுதிகள் ஆகியவை இத்திட்டத்தின் வரம்பிற்குள் வராது.

சுருக்கமாகச் சொன்னால், பழைய திட்டமிடப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவா்கள் தங்கள் சொத்துக்களை ஒன்றிணைத்து மறுசீரமைப்பு செய்வதற்கும், அதே வேளையில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.