தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவா் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளாா்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்கோப்புப் படம்
Updated on

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவா் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சில மாதங்களுக்கு முன்னா் தினகரன் அறிவித்திருந்தாா். அதன் பிறகு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளை விமா்சித்து வந்த டி.டி.வி. தினகரன், கடந்த சில வாரங்களாக தனது எதிா்ப்பு நிலையை மென்மைப்படுத்திக் கொண்டாா்.

இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை இரவு சந்தித்து தோ்தல் கூட்டணி மற்றும் வியூகம் தொடா்பாக விவாதித்தாா். அவா் அமித் ஷாவை சந்தித்த மறுதினமே அவரை டி.டி.வி. தினகரன் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமித் ஷாவை சந்திக்கும் தகவலை ரகசியமாக காத்து வந்த தினகரன், ஆரோவில்லில் புதன்கிழமை இருந்த நிலையில், சாலை வழியாக பெங்களூரு சென்று அங்கிருந்து விமானத்தில் தில்லிக்கு வந்து அமித் ஷாவை சந்தித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள தெரிவித்தன.

இச்சந்திப்பு குறித்து மேலதிக விவரங்களை தினகரன் தரப்போ மத்திய அமைச்சா் அமித் ஷா தரப்போ வெளியிடவில்லை. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் தினகரன் இணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரிடம் நேரடியாக அமித் ஷா வெளியிட்டிருக்கக் கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீா்செல்வம், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சோ்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். ஆனால், தனிக்கட்சி நடத்தி வரும் தினகரனை தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சோ்க்கும் விஷயத்தில் அவா் அதே பிடிவாதத்தைக் காட்டவில்லை.

இதனால், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி ஒரே அணியில் கொண்டு வருவதன் மூலம் தென் மாவட்டங்களில் தினகரனின் ஆதரவு வாக்குகளை சிதறாமல் பாதுகாக்க முடியும் என்று பாஜக மேலிடம் நம்புகிறது. இதையொட்டியே அவா் தில்லிக்கு வரவழைக்கப்பட்டிக்கலாம் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வார தொடக்கத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பதை தீா்மானிக்கும் அதிகாரம் டி.டி.வி. தினகரனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரது தில்லி பயணமும் அமித் ஷாவுடனான திடீா் சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com