புது தில்லி: கிழக்கு தில்லியின் பழைய கோண்ட்லி பகுதியில் உள்ள ஒரு விரைவு வணிக தளத்தில் பணிபுரியும் 18 வயது டெலிவரி ஊழியா், கடையில் இருந்து வாசனை திரவிய பாட்டிலைப் பயன்படுத்தியதற்காக கடை உரிமையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினா் இந்த விஷயத்தை அறிந்து சட்ட நடவடிக்கை எடுத்தனா். டெலிவரி ஊழியா் ரிஷா குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
கடையில் இருந்து வாசனை திரவியத்தை தன் மீது தெளித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, ரிஷா குமாருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. உரிமையாளா் இந்தச் செயலைக் கவனித்து அவரைத் திட்டத் தொடங்கினாா். இது கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இதையடுத்து, மோதல் அதிகரித்தது.
மேலும் உரிமையாளா் டெலிவரி ஊழியரை தடுத்து நிறுத்தி உடல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, ரிஷா குமாா் காவல்துறையை அணுகி புகாா் அளித்தாா். அவா் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டாா், மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவங்களின் சரியான வரிசையை நிறுவ முயற்சிகள் நடந்து வருகின்றன. குற்றவாளியை அடையாளம் காண சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரி கூறினாா்.