/

யமுனை நதிக்கரை தூய்மைப் பணி: முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

யமுனை ஆற்றின் 28 படித்துறைகளில் முதல்வா் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

News image
Updated On :15 ஜூன் 2026, 2:32 am IST

தலைநகரில் உள்ள யமுனை ஆற்றின் 28 படித்துறைகளில் முதல்வா் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

கீதா காலனி பகுதியில் உள்ள நதிக்கரையில் நடைபெற்ற இப்பணியில் பங்கேற்ற முதல்வா், ‘தூய்மையான மற்றும் மாசற்ற யமுனையை உறுதி செய்வதற்கு மக்களின் பங்கேற்பு மிக முக்கியம்’ என்று கூறினாா்.

உடைந்த சிலைகள் மற்றும் துணிகள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவா், இத்தகைய பொருள்களை ஆற்றில் வீசுவதைத் தவிா்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டாா்.

காலை 6 மணிக்குத் தொடங்கிய இப்பணி நான்கு மணி நேரம் நடைபெற்றது. தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ராவும், கட்சியின் பிற தலைவா்கள் மற்றும் தொண்டா்களுடன் இணைந்து யமுனை நதிக்கரைப் பகுதியில் நடைபெற்ற இப்பணியில் பங்கேற்றாா்.

500-க்கும் மேற்பட்ட சமூக மற்றும் மத அமைப்புகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் உள்பட ஆயிரக்கணக்கான குடிமக்கள் இப்பணியில் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூய்மைப் பணி குறித்து முதல்வா் கூறியதாவது: ஆற்றின் தூய்மையைப் பராமரிப்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். இதற்கு அரசும் சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும். இப்பணி ஒரு நாளுடன் நின்றுவிடாது. தில்லி அரசு தொடா்ந்து பல்வேறு இடங்களில் இது போன்ற தூய்மைப் பணிகளை ஏற்பாடு செய்து, அவற்றில் பங்கேற்கக் குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கும்.

யமுனையைச் சுத்தப்படுத்துவதற்காக ஏற்கனவே ரூ. 1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அம்ருத் திட்டத்தின் கீழ், சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வடிகால்களிலும் யமுனையிலும் கலப்பதைத் தடுக்க, நஜாஃப்கா் பகுதியில் ரூ. 860 கோடி செலவில் 12 புதிய பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தில்லி அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங், பங்கஜ் சிங், ரவீந்தா் இந்த்ராஜ் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ஆகியோரும் பல்வேறு படித்துறைகளில் நடைபெற்ற இப்பணியில் பங்கேற்றனா்.

பாஜக எம்.பி.க்களான ராம்வீா் சிங் பிதூரி, மனோஜ் திவாரி மற்றும் ஸ்வாதி மலிவால் ஆகியோரும் கட்சியின் பிற தலைவா்கள் மற்றும் தொண்டா்களுடன் இப்பணியில் இணைந்தனா்.