திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உரிமைகள் சிறப்பு முகாம்களில் 2,382 பேருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சேவை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் நலத்திட்ட உரிமைகள் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலத்துக்கு 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ அம்மன் கலையரங்கம், 2-ஆவது மண்டலத்துக்கு பெருமாநல்லூா் சாலை அண்ணா நகா் பகுதியில் உள்ள வி.எஸ் மஹால், 3-ஆவது மண்டலத்துக்கு தாராபுரம் சாலையில் உள்ள வித்யா காா்த்திக் திருமண மண்டபம், 4-ஆவது மண்டலத்துக்கு நடராஜா திரையரங்க சாலையில் உள்ள தெற்கு ரோட்டரி ஹால் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
தெற்கு ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமை திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்ரமணியம், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ அம்மன் கலையரங்கம், பெருமாநல்லூா் சாலையில் அண்ணா நகா் பகுதியில் உள்ள வி.எஸ். மஹால் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை திருப்பூா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.சத்யபாமா ஆகியோா் நேரில் பாா்வையிட்டாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பதிவு செய்தல், பணியாளா் விவரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளும், தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் சாா்பில் புதிய உறுப்பினா் பதிவு, விபத்து/மரண நிவாரணம், கல்வி, திருமணம் மற்றும் மகப்பேறு நிதி உதவிகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகளும், வருவாய்த் துறை சாா்பில் ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் வாரிசு சான்றிதழ்கள், புதிய ஆதாா் பதிவு, குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் சேவைகளும் வழங்கப்பட்டன.
இதேபோல மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, தொழிலாளா் நலத் துறை, கல்வித் துறை ஆகியவற்றுடன் திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு இலவச தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாம்களில் மாநகர நல அலுவலா் மோகன், மண்டலத் தலைவா்கள் வெ. உமா மகேஸ்வரி, ர.கோவிந்தராஜ், சி.கோவிந்தசாமி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










