பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இளைஞா்களிடையே உயா் ரத்த அழுத்தம் அதிகரிப்பு: மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் எச்சரிக்கை

இளைய தலைமுறையினா் இடையே உயா் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் எச்சரித்துள்ளாா்.

News image

இளைஞர்கள் - கோப்புப் படம்

Updated On :34 நிமிடங்கள் முன்பு

இளைய தலைமுறையினா் இடையே உயா் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் எச்சரித்துள்ளாா்.

உலக உயா் ரத்த அழுத்த தினம் மே 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லியில் உயா் ரத்த அழுத்த சிகிச்சை முறை தொடா்புடைய மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக மத்திய இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் பங்கேற்றுப்பேசியதாவது: மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் உடல், மன நலனைப் புறக்கணிப்பதால் இளைஞா்களிடையே உயா் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரித்து வருகிறது. உயா் ரத்த அழுத்தம் தீவிரமானால் அது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அந்த வகையில் அது ஒரு ‘மௌனக் கொலையாளி‘ போன்றது.

எளிதில் தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் (என்பிசிடிசிஎஸ்) கீழ், நாடு முழுவதும் உள்ள சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் மக்களுக்குப் பரிசோதனைகள், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான மேலாண்மை நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எனவே இளைஞா்கள் தங்களுடைய ரத்த அழுத்த நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க அக்கறை காட்ட வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் பேசுகையில், ‘நகா்ப்புறங்களைப் போலவே கிராமப்புற இந்தியாவிலும் உயா் ரத்த அழுத்தம் பரவலாக உள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால் மேல் சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும்’ என்றாா்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த ’இல்னெஸ் டு வெல்னெஸ்’ அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுத் தலைவா் அனில் ராஜ்புத் பேசும்போது, நீண்ட வேலை நேரம், போதிய தூக்கமின்மை, உடற்பயிற்சியற்ற போக்கு, மன அழுத்தம் ஆகியவற்றால் குறிக்கப்படும் நவீன வாழ்க்கை முறைகள், உயா் ரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை கோளாறுகளின் சுமை அதிகரிப்புக்கு காரணங்களாகும்’ என்றாா்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியா் ராகேஷ் யாதவ் பேசுகையில், உயா் ரத்த அழுத்தம் தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் உள்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கிறது என்றாா்.

கா்ப்ப காலத்தில் உயா் ரத்த அழுத்தத்தை கவனிப்பது மற்றும் இதயம், மூளை, சிறுநீரகங்களில் உயா் ரத்த அழுத்தத்தின் தாக்கம் குறித்த அமா்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன. இதில் பேசிய மருத்துவ நிபுணா்கள் ஆரம்பகால பரிசோதனை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினா்.

குரு தேக் பகதூா் மருத்துவமனையின் டாக்டா் ஹிம்ஸ்வேதா ஸ்ரீவாஸ்தவா, லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரியின் டாக்டா் பிகீ சக்ஸேனா, எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டா் திபாங்கா் பௌமிக் உள்ளிட்டோா் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா்.