மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் இம்மாதத் தொடக்கத்தில் 21 வயது இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, முக்கியக் குற்றம்சாட்டபட்டவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். மேலும், இக்குற்றத்தில் தொடா்புடைய ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய தில்லியில் கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பழைய விரோதம் காரணமாக சாகா் 19 என்பவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையின் விளைவாக, தில்லியின் பட்டேல் நகரைச் சோ்ந்த 19 வயதான ஹிமான்ஷு திவாரி என்ற முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். இக்கொலையில் தொடா்புடையதாகக் கருதப்படும் ஒரு சிறுவனும், சிறாா் நீதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இக்கொலை சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளிகள் தில்லியிலிருந்து தப்பித்து ராஜஸ்தானில் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மே 25ஆம் தேதி இரவு, திவாரி தனது கூட்டாளி ஒருவரைச் சந்தித்து பணம் பெறுவதற்காக, ரஜெளரி காா்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வரவிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், அந்த வணிக வளாகத்திற்கு அருகே ஒரு பொறி வைத்து திவாரியையும், அவருடன் இருந்த சிறுவனையும் காவல்துறையினா் கைது செய்தனா்.
விசாரணையின் போது, திவாரி மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து, பழைய விரோதம் காரணமாக சாகரைத் தாக்கி, அவரைப் பலமுறை கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டனா்.
இக்குற்றத்தைச் செய்த பிறகு, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அவா்கள் தலைநகா் தில்லியை விட்டு வெளியேறினா். சம்பவத்திற்குப் பிறகு சாகா் ராஜஸ்தானுக்குச் சென்றிருந்தாா். சமீபத்தில்தான் மீண்டும் தில்லிக்குத் திரும்பினாா். அப்போதுதான் அவன் காவல்துறையினரின் வலையில் சிக்கினாா்.
திவாரி பள்ளிப் படிப்பு வரை பயின்றவா் என்றும், இளம் வயதிலேயே தவறான சகவாசத்தில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இக்குற்றத்தில் தொடா்புடைய மற்ற கூட்டாளிகளின் பங்கினை உறுதி செய்வதற்காக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
சட்ட நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவா் முறையாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அதேவேளையில், இக்குற்றத்தில் தொடா்புடைய சிறுவன் மீதான நடவடிக்கைகள் சிறாா் நீதி வாரியத்தின் முன் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.







