எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் - அம்மன் சத்தியநாதன்; பக்.184; ரூ.150; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை-5; 044 - 4266 3546.
ஆண்டாள் அளித்த வாசகம் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது. ஆன்மரீதியாக இறைவனுடன் கட்டுண்ட அடியார்களுக்கு நேரும் சிலிர்க்கும் அனுபவங்களை உணர்பவர்கள் இப்படியே கூறுவர். இந்த நூலில் அப்படிப்பட்ட சிலிர்க்கும் ஆன்ம அனுபவக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக மாத இதழில் எழுதப்பட்ட 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலான இதில், ஆண்டாளைப் பற்றிய கட்டுரையுடன் துவங்குகிறது. குரு ராகவேந்திரர் வாழ்க்கை, திருக்கச்சி நம்பிகளும் வரதராஜப்பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணர், ஜாம்பவானின் சயமந்தக மணி குறித்த கதைகள், தர்மரை வியக்க வைத்த கீரிப்பிள்ளையின் தர்மோபதேசம் என இதிகாச புராணக் கதைகளுடன், பக்தர்களின் வாழ்வியல் சம்பவங்களும் எளிய நடையில் படிக்க சுவாரஸ்யத்தையும் பக்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, நாமக்கல் நாமகிரித் தாயார் நிகழ்த்திய அற்புதங்கள், கணித மேதை ராமானுஜம் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்கள் ஆகியவை ஆன்மிக அன்பர் மனத்தில் நம்பிக்கை ஊட்டுபவை. காஞ்சி மகாபெரியவர் சொன்ன அருளுரை, சுகானந்தர் என்பவரின் இறையருள் பெற்ற அனுபவம் ஆகியவற்றைப் படிக்கும்போது எழுத்து நடை நம்மை வசீகரித்து இருத்துகிறது. அறிந்த கதைகளாக சில இருந்தாலும், அதனை நூலாசிரியர் கூறும் விதம் சிறப்பு. ஆன்மிக அனுபவம் பெற விழைவோர்க்கு நல்ல வாசிப்பு இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








