மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் (மூலமும்-உரையும்)- தருமையாதீனப் புலவர் முனைவர் பா. சிவநேசன்; பக். 632; ரூ. 600; எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 033, ✆ 99406 82929.
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து இறைவனின்அனுபவத்தை உணரலாம்; எடுத்து இயம்ப முடியாது. எடுத்து இயம்ப முடியாத அந்த மெய்ஞ்ஞான அனுபவத்தை உள்ளம் உருக வைக்கும் வகையில் திருவாசகமாக மாணிக்கவாசகர் அருளி இருக்கிறார்.
சிவபுராணம் முதல் அச்சோ பத்து வரை 51 பதிகங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதியும், அருஞ்சொல் அகராதியும் இந்நூலின் வடிவத்தை முழுமையாக்குகின்றன.
ஏராளமான உரையாசிரியர்கள் திருவாசகத்துக்கு உரை எழுதி இருக்கிறார்கள். 'கோயிலில் மூலவரையும்- உற்சவரையும்போல பதிகமும்- உரையும் ஜாடிக்கேற்ற மூடியாக உள்ளதெனக் கொள்ளலாம்' என்கிற அணிந்துரை வரிகள் இத்திருவாசக உரை நூலுக்கு ஏற்ற மெய்யான வரிகள்.
உரையாசிரியர் தன்னுரையில் கூறுகையில், 'ஐந்தொழில் நிகழ்த்தும் ஐயன், ஐந்து திங்களில் இப்பணியை நிறைவேற்றி வைத்தனன்' எனக் கூறி இந்த நூலை உருவாக்க பதிகங்களுக்கு உரை எழுதும்போது ஏற்பட்ட இறைத்தொடர்பையும் மெய் உணர்வையும் கூறி, அது எந்தப் பாடலில் எப்படி நேர்ந்தது என்கிற தகவல்களையும் தரும்போது பக்தி உணர்வு மேலிடுகிறது.
இறைவனின் அருள் இறக்கத்தால் சொற்கள் ஊற்றெடுத்து; பாடல்களாய் பரிணமித்து; ஞானப் புனலாய் வழிந்தோட, அதில் ஒரு துளியேனும் நம்மில் பட்டாலே வீடுபேறு அடையும் பாக்கியம் நமக்கு உண்டு என்கிற தத்துவ சாராம்சம்தான் இந்தத் திருவாசக உரை விளக்கம்.
இறைவனின் குணத்தை பாடல்களின் விளக்கங்கள் நமக்குக் காட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் இறைவனை அவரவருக்குப் புரியும் தோற்றத்தில் அந்தப் பாடல்கள் விளக்கம் கொடுக்கும் அற்புதம், திருவாசகப் பதிகங்களில் நிச்சயம் நடக்கும்.
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK







