ஸ்ரீமத் பகவத் கீதை - ஆதிசங்கரர் விளக்க உரையும் பாரதியாரின் மொழிபெயர்ப்பும்- மொழிபெயர்ப்பாளர் அ. பத்மநாபன்; பக். 574; ரூ. 595; சிபிஎச் பப்ளிகேஷன்ஸ், சுசீந்திரம் -629 704, ✆ 95388 35671.
ஐந்தாம் வேதம் எனப் போற்றப்படும் பகவத் கீதைக்கு ஏராளமான உரைகள் பண்டைய காலம் தொட்டே இருந்து வந்துள்ளன. அவற்றுள் ஆதிசங்கரரின் உரையும் ராமானுஜரின் உரையும் முக்கியமானவை. அத்வைத சித்தாந்த அடிப்படையில் அமைந்தது ஆதிசங்கரர் உரை. விசிஷ்டாத்வைத சித்தாந்த அடிப்படையில் அமைந்தது ராமானுஜரின் உரை.
இவ்விரு ஆசார்யர்களைப் பின்பற்றி வெவ்வேறு காலங்களில் பலர் கீதைக்கு உரை இயற்றியுள்ளனர். ஆன்மிகப் பெரியோர்கள் மட்டுமல்லாமல் பாலகங்காதர திலகர் போன்றோரும் கீதைக்கு உரை இயற்றியுள்ளனர்.
இவையெல்லாம் வெறும் மொழிபெயர்ப்பல்ல. ஞான வழிகாட்டியாகவும், செயல் என்னும் கர்மத்துக்கு வழிகாட்டியாகவும், மோட்சத்துக்கு வழிகாட்டியாகவும் பல விதங்களில் கீதையை அணுகியுள்ளனர் உரையாசிரியர்கள்.
திலகரைப் போலவே அவரது சீடரான பாரதியாரும் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசத்து மக்களுக்குப் புத்துணர்வூட்டி சுதந்திரக் கனலை மூட்ட கீதையைக் கையாண்டார். கீதை கூறும் செய்தி என்ன என்பதைக் காலத்துக்கேற்ற வகையில் ஆராய்ந்து மகாகவி பாரதியார் உரை இயற்றியுள்ளார்.
இந்த நூலில் கீதை ஸ்லோகம் வடமொழியிலும் தமிழ் எழுத்திலும் தரப்பட்டுள்ளது. ஸ்லோகத்தின் கீழ் பாரதியாரின் உரை; அதையடுத்து ஆதிசங்கரரின் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. கீதைக்கு வடமொழியிலான சங்கரரின் உரை தமிழில் இப்போது பலவாறு கிடைக்கிறது. பழைய பதிப்புகளின் துணையுடன் சங்கரர் உரை தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர் தனது அவாவை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நூலை உருவாக்கியுள்ளார். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி கண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










