தமிழ்த் தொண்டர்த் தொகை- முனைவர் தி. அமலோர்; பக்.404; ரூ.185; தி.அமலோர் வெளியீடு, புதுச்சேரி-605110; ✆ 94430 94192.
ஞானியாரடிகளின் நேரடி மாணவரான சுந்தரசண்முகனாரின் மாணவர்தான் நூலாசிரியர். உளவியல் துறையில் 38 ஆண்டுகள் பேராசிரியராக கல்வித் தொண்டாற்றிய இவர், கல்வித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். "திருத்தொண்டர்த் தொகை' எனும் முதல் நூலை எழுதியவர் இரண்டாவதாக இந்த நூலை எழுதியுள்ளார்.
தான் படிக்கும்போது தமிழ்ச் செய்யுள்கள், உரைநடைகளை இயற்றிய ஆசிரியர், குறிப்புகளைத் தனித்தனியே பார்த்த நிலையில், ஒரே இடத்தில் சேர விரும்பி இந்த நூலை அவர் எழுதியதாக குறிப்பிடுகிறார். 17-ஆம் நூற்றாண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்த, அதாவது குமரகுருபரர் தொடங்கி ஒளவை நடராஜன் வரையிலான ஆகச் சிறந்த நூறு தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் தமிழ்த் தொண்டுகள், படைப்புகளைச் சுருக்கமாக, அதே நேரத்தில் முக்கியமானவை விடுபடாமல் நூலாசிரியர் அளித்துள்ளார்.
ஊர்கள்தோறும் சென்று ஓலைச்சுவடிகளைத் தேடிப் பிடித்து பாதுகாத்ததுடன் பதிப்பித்தல், அவற்றுக்கு உரை எழுதுதல், புதிய இலக்கியப் படைப்புகளைப் படைத்தல், பிறமொழி நூல்களை மொழிபெயர்த்தல், முத்தமிழை வளர்த்தல் என்று இவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டுகளைப் படிக்கும்போது வியப்பு மேலிடுகிறது.
வீரமாமுனிவர், சீகன் பால்க், பிரான்சிஸ் வைட் எல்லீஸ், ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப் உள்ளிட்டோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தாய்மொழிப் பற்றை உருவாக்கக் காரணமாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









