47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை!!

இன்றைய பதிவில் மீண்டும் ஒருமுறை ஓதிமலை தரிசனம் செய்ய உள்ளோம். ஏற்கனவே இரண்டு பதிவுகளாக ஓதியப்பர் தரிசனம் பற்றி பதிவிட்டுள்ளோம். முதல் பதிவில் ஓதிமலை....

News image
Updated On :28 டிசம்பர் 2017, 9:49 am

தினமணி

இன்றைய பதிவில் மீண்டும் ஒருமுறை ஓதிமலை தரிசனம் செய்ய உள்ளோம். ஏற்கனவே இரண்டு பதிவுகளாக ஓதியப்பர் தரிசனம் பற்றி பதிவிட்டுள்ளோம். முதல் பதிவில் ஓதிமலை ஏற்றம் பற்றியும், இரண்டாம் பதிவில் அகத்தியர் ஆசியினால் நாம் மேற்கொண்ட உழவாரம் பற்றியும் பார்த்தோம். நமக்கு அந்த தொண்டின் அருமை புரியவில்லை, ஆனால் தற்போது தான் ஓதியப்பரின் அருள் பற்றி உணர முடிகின்றது. மீண்டும் எப்போது அருள்வார் என்று வழி மீது விழி வைத்துக் காத்திருக்கின்றோம்.

அன்பர் ஓதியடிமை அவர்கள் பின்னூட்டத்தில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒதிமலை குமரேசனை உழவாரம் செய்து அவன் அன்பைபெற்றுவிட்டீர்!
ஐயனே மிகச்சிறந்த அருட்பணி அருளியுள்ள நிலை வணங்கத்தக்கது!

பதிவின் உள்ளே செல்லும் முன்பு, அழகனை,குமரனை,முருகனை பற்றி சற்று சிந்திப்போம்.

Story image

நம் சனாதன தர்மத்தில் பல கடவுள்கள் உள்ளனர், அதுவும் நம் தலைவர் சிவபெருமான் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றார். ஆனால் தற்போது கோயிலுக்கு சென்றால், இவன் இல்லறத்திற்கு சரிப்படமாட்டான் என்று பேசுவது தெரிகின்றது. ஆனால் உண்மை அதுவன்று. கோயிலுக்கு செல்வது, உத்திராட்சம் அணிவது, திருநீறு அணிவது போன்றவற்றிற்கும் இல்லறத்திற்கும் சம்பந்தம் உண்டு. சரி.. இது ஒரு புறம் இருக்கட்டும். பல தெய்வ வழிபாடு நம் தர்மத்தில் இருந்தாலும், யோசித்துப் பாருங்கள், சிவன், விநாயகர், ஐயப்பன், பெருமாள் என அனைத்து தெய்வங்களும் ஒரே ஒரு முகத்தோடு அருள் தருகின்றனர். ஆனால் நம் முருகப் பெருமான் ஒரு முகம் முதல் ஆறு முகம் வரை அருள் தருவது சூட்சுமமான ஒன்று. அந்த வரிசையில் முருகபெருமான் அருள்புரியும் திருத்தலங்கள் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் -- அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன் --  ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன் -- திண்டுக்கல் சின்னாளப்பட்டியிலும்,

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன் -- கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன் -- சென்னிமலையிலும்,

6. ஒரு முகம் தண்டாபுதபாணியாக -- பழனியிலும்,மற்றும் அனேக இடங்களில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

Story image

மேலே சொன்ன ஒவ்வொரு அருள் நிலையைப் பற்றி சிறிது அறிய உள்ளோம்.

1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும்.அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால் பக்தர்கள்  பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

Story image

2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் - போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.

3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்- திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்  பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப் பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

4. மூன்று முகத்திருக்கோலம் - மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன், கிழக்கு பார்த்த முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார். எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில் முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

Story image

5. இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும் அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல கிரக பீடைகளும் உடனே விலகும்.

6. ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம். விரிவாக பழனி மற்றும் அறுபடை வீடு தலங்கள் பற்றி நாம் உணர முருகன் அருள் முன்னிற்கட்டும்.

Story image

இதுபோல் முருகனைப் பேசுவதென்றால் இந்த ஒரு பதிவு போதாது. நம் தளத்தின் முருகன் புகழ் பாடி இருக்கின்றோம்.பதிவின் இறுதியில் உள்ள சுட்டியை உபயோகித்து, படியுங்கள்.
ஓதிமலை தரிசனத்தில், உழவார முடித்து அமர்ந்தோம். சற்று நேரத்தில் குருக்கள் வந்தார்கள்,

Story image

குருக்கள் வந்ததும், உள்ளே சன்னதியைத் திறந்து, சென்றோம், பின்பு நாங்களும் உள்ளே சென்றோம், அனைத்தும் முடித்து, யார் யாரெல்லாம் அவசரமாக செல்ல வேண்டுமோ, அவர்கள் முன்னே வாருங்கள் என்றார். நாமும், நமது உறவுகளும் வழி விட்டோம். நாம் பொறுமையாக அங்கே இருந்து ஓதியப்பரை தரிசனம் பெற அல்லவா காத்திருந்தோம். தரிசனம் பெற சுமார் ஒரு ஒரு மணி நேரம் ஆகும் என்று நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு. காலை 10 மணி அளவில் ஓதிமலை மேலே இருந்தோம். ஆனால் பூஜை சரியாக 1 மணிக்கு மேல் தான் நடந்தது. இது போல் நாம் ஒரு பூஜையை எங்கும் கண்டதில்லை. பொறுமையாக, நிதானமாக குருக்கள் அபிஷேகம் செய்தார்.

Story image

நேரம் செல்ல, செல்ல பசி வயிற்றைக் கிள்ளியது. நமக்கு வேல்மாறல் பாட வாய்ப்பு கிடைத்தது. பின்பு சில பதிகங்கள் அடங்கிய பிரசுரத் துண்டுகளை அங்கே இருந்த அடியார்களுக்குக் கொடுத்தோம். சரியாக 3:30 மணி அளவில் பூஜை நிறைவு பெற்றது. அந்த முருகப் பெருமானே குழந்தை வடிவில் அங்கே இருப்பதைக் கண்டோம். காட்சிப் படங்கள் எடுக்க அனுமதிக்க வில்லை. ஆதலால் ஏற்கனவே பயணத்தில் இருந்த படங்களை மீண்டும் இங்கே இணைக்கின்றோம்.

Story image

குருக்கள் முதலில் கோயிலின் வெளியே உள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்தார், சிவன், விநாயகர், அம்மன் எனவெளியில் நடைபெற்ற பூஜையே நம்மை கவர்ந்தது. அப்படியென்றால் முருகப் பெருமானுக்கு வேண்டுமா என்ன?

Story image

மகா ஆரத்தி காட்ட ஆயத்தம் ஆதல். இது போதாதா? நாம் செய்த பாவங்கள் இந்த ஆரத்தியில் பொசுங்கட்டும், அறுகுணம் சீர் ஆகட்டும், வல்வினை, வரப் போகின்ற வினை நம்மை சிறக்க உதவட்டும், இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் மகிழ்வோடு வாழ வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்தோம்.  மேலும் நம் TUT உறவுகள் அனைவரின் பெயரிலும் சங்கல்பம் செய்தோம், அது மட்டுமா? நம் TUT தளத்திற்கு மேலும் ஒரு அருள் கிடைத்தது. நம் தளத்திற்கு முருகன் அருள் கிடைத்துக் கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியமே என்று உணரச் செய்தார் முருகப் பெருமான்.

Story image

இதனையடுத்து, வெளியே பிரசாதம் வழங்கப்பட்டது. குருக்கள் மீண்டும் ஒருமுறை திரை போட்டார், நமக்கு தூக்கி வாரிப்போட்டது, பின்பு முருகன் மீண்டும் அருள் பாலித்தார். அனைவரும் பூ கேட்டல் நிகழ்வில் இருந்தனர். நமது நியாயமான கோரிக்கையை மனதில் நினைத்து, ஓதியப்பரிடம் வேண்ட வேண்டும், அப்போது அவரிடம் இருந்து, உத்தரவு இருந்தால் பூ கீழே விழும், இது போன்ற நிகழ்வு நமக்கு புதிதாக இருந்தது. ஆனால் ஓதியப்பரின் ஆசி பரிபூரணமாக இருந்தது.

Story image

பின்பு செவிவழி செய்தியாக நமக்கு கிடைத்து என்னவென்றால், ஒவ்வொரு முறை பூஜை முடித்ததும், முதலில் குருக்கள், முருகனிடம் பேசுவார், பூ போட்டு பார்ப்பார், ஓதியப்பர் ஆசி கிடைத்தால் தான் திரை விலக்கி, வெளியே உள்ள அடியார்களுக்கு ஆசி கிடைக்கும், இல்லையென்றால் குறைகள் களையப்பட்டு, பூஜை நடைபெறும். கேட்கவே சிலிர்ப்பாக இருந்தது.

Story image

வெளியே வந்து, பிரசாதம் உண்டோம். அப்பப்பா என்ன சுவை. இன்னும் நாவினில் அந்த சுவையை உணர முடிகின்றது. உடனே முருகப் பெருமானை மனதார நினைத்து, மீண்டும் ஒருமுறை தொழுது, கீழே இறங்க ஆரம்பித்தோம். மலையேற்றத்தை விட, மலையிறக்கம் சற்று எளிதாய் இருந்தது.

Story image

அனைவரும் மெதுவாக கீழே இறங்கி வந்தோம். அருமையான முருகனின் அருளில், ஓதிமலையேற்றம், சித்தர்களின் அருள், கண்ணுக்கு விருந்தாய் பாலகனின் தரிசனம், செவிகளுக்கு விருந்தாய் மயிலின் குரல், ஐம்புலனும் ஓதியப்பருள் ஒடுங்கியது. ஓதிமலை தரிசனம் பித்தத்தை நீக்கி, சித்தத்தை உணர்த்தி, சித்தர்கள் அருள் பெற வைத்தது.

- ராகேஸ் TUT

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.