திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று நடந்த தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்குச் சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்ந்தார்.
சந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை 4.15 மணியளவில் நடை திருக்காப்பிடப்பட்டு, இரவு 9.30 மணியளவில் திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. இராக்கால அபிஷேகமும், தொடர்ந்து மற்ற பூஜைகளும் நடைபெற்றது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே திருச்செந்தூர் கோவிலுக்கு அதிகளவில் பாதயாத்திரை பக்தர்கள் வந்ததால், திருக்கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணைஆணையர் பாரதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.