உயிர்க்கொல்லி நோய்: என்ன சொல்கிறது மருத்துவ ஜோதிடம்?

உயிர்க்கொல்லி நோயும், அதன் விரிவாக்கமும்... பரிகாரங்களாக என்னென்ன செய்யலாம்...?
உயிர்க்கொல்லி நோய்: என்ன சொல்கிறது மருத்துவ ஜோதிடம்?

முதலில் உயிர்க்கொல்லி நோய் என்றால் என்ன என்று பார்ப்போம் பின்பு ஜோதிட சூட்சமத்தைத் தெரிந்துகொள்வோம். இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு நோய்கள் வந்தாலும் அவற்றிக்கு மருந்து கண்டுபிடிப்பு என்பது இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சில நோய்களுக்கு மருந்து என்பது இருந்தாலும் அவற்றிற்கு நூறு சதவீதம் குணப்படுத்தும் தன்மையில்லை. உயிரைப் பறிக்கும் பல்வேறு நோய்கள், பல்வேறு ரூபத்தில், வெவ்வேறு பெயர்களில் வந்துகொண்டே தான் இருக்கிறது. ஒருசில நோய்கள் தொடர் மருத்துவச் சிகிச்சை மற்றும் மாத்திரைகள் கொண்டு சிலகாலம் ஆயுளை தள்ளி  வைத்துகொள்ள முடியும். "விருந்தும் மருந்தும் மூன்று நாள்கள்" என்ற பழமொழிக்கு ஏற்ப விருந்தும் மருந்தும் 3 நாள்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

மருந்தை வாழ்நாள் முழுவதும் எடுப்பவர்களுக்கு சில சமயம் அதுவே உயிர்க் கொல்லியாக மாறிவிடும். இவற்றில் முக்கியமானது கேன்சர், மனநோய், இதய நோய், மூளை சாவு, எய்ட்ஸ், பூஞ்சை,  நீரழிவு நோயின் தாக்கத்தால் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு மற்றும் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் நோய்களால், பல்வேறு வயதினரும் பாதிக்கின்றனர். ஒருசில நோயின் பாதிப்பு தெரியாமலே, அது தீவிரமாக செயலிழந்து பிறகு தான் வெளிப்படும். இது ஒரு சைலண்ட் கில்லர். முக்கியமாக நீரழிவு என்னும் நோய் ஆபத்தானது இல்லை என்றாலும் அது பல்வேறு நோய்கள் வருவதற்கு ஒரு நுழைவாயிலாகும். உயிர்க்கொல்லி நோய்கள் பல்வேறு வயதிலும் வர வாய்ப்புகள் அதிகம். நம் பாரம்பரிய மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்று மூன்றில் ஒன்றின் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் தாக்கம் இருக்கும். பஞ்சபூத தத்துவத்தில் உள்ள கிரகங்களும் இதன் அடிப்படையில் இயங்கும் என்பது ஜோதிட கூற்று.  

உயிர்க்கொல்லி நோய்களுக்கு கிரகங்கள் மற்றும் பாவங்களின் முக்கிய பங்கு 

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் உள்ள பாவிகளின் சேர்க்கையும் மற்றும் அவருடைய அசுப பாவங்களின் தொடர்பு ஒருவரின் நோயின் தன்மையை குறிகாட்டும். அவற்றோடு ஒருசில வர்க்க சக்கரங்கள் தெளிவாக படம் போட்டு காட்டிவிடும். அது எப்பொழுது என்பது அவரின் அன்றைய கோட்சாரமும், அவரின் தசை புத்தியும் சொல்லும். முதன்மை நோய் என்பது ராசி கட்டத்தில் தெள்ள தெளிவாக தெரிந்து விடும். ஒருவரின் உயிர் குறிக்கும் லக்கினம் மற்றும் உடலைக் குறிக்கும் சந்திரன் தொடர்போடு தான் அவரவர் பாவ கிரகங்கள்  இயங்கும். ஜோதிடத்தில் உள்ள சுப கிரகங்களும் தீமையை திறம்பட செய்வார்கள். நோயின் தீவிரத்தை அதிகமாக்க முக்கிய லக்கின பாவிகளுடன், சாயா கிரங்களுடன் 6,8,12 பாவத்தில் தொடர்பு ஏற்பட்டால் உயிரைக் கொல்லும் நோயின் தீவிரத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும். அடுத்து நெருப்பு ராசியில் உள்ள கிரகங்கள் மற்றும் வெப்ப கிரகங்களின் தாக்கம் நோயின் தீவிரத்தைச் சொல்லும்.

நோய் பாதிப்பு காணல்: முதன்மை வர்க்க சக்கரமான ராசி கட்டத்தில் ஒருவருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதா என்று பார்க்கலாம். நோயின் ஆதிமூலம் திரேக்காணம் (D3) மற்றும் நோயின் தீவிர தாக்கம் ஷஷ்டாம்சம் (D6) சொல்லும். லக்கினத்தில், 6ம் அதிபதி (or) ஆறில் நிற்கக் கூடிய கிரகம், எந்த பாவத்தில் இருக்கோ மற்றும் தொடர்பு பெறுகிறதோ - அந்த பாவத்தில் உள்ள உறுப்பில் நோயின் பாதிப்பு இருக்கும் என்பதை வர்க்க சக்கரம் சொல்லிவிடும். அது வியாதியைக் கொடுக்காமல் போகாது.

பலம் பெற்ற கிரகங்கள் ஒருவருக்கு யோகத்தை தரவல்லது. அதே சமயம் அந்த நபருக்கு மற்றொரு பிரச்னையை செய்ய தயாராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நோயின் தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகம் அதிக பரல்களையும், ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்றால் அதுவும் மறைவு இடத்தில் பலம் பெற்றால், அது நோயின் திடீர் தீவிரத்தைத் தர தயாராகிவிட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன் தீவிரதன்மை முக்கியமாக உயிர்க்கொல்லி நோயை திடீரென்று ஏற்படுத்தும். எடுத்துக்காட்டு ஒருவரின் ஜாதகம் கீழே உள்ள சார்ட் 1ல் பார்க்கவும்.

சந்திரன் என்பவர் நீர் தன்மையும், ரத்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் நோய்களின் காரணிகள். நம் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் ஒரு சரியான விகிதாசாரத்தில் தான் இருக்க வேண்டும். அவை அதிகமானாலும் குறைத்தாலும் ஆபத்து ஏற்படும். எடுத்துக்காட்டாக நீர் தன்மை கொண்ட பால் நீர் ஓரிடத்தில் தேங்கினால், பல நாள்களுக்குப் பிறகு, அங்கே ஒரு நாற்றம் மூக்கை துளைத்துவிடும், அதுபோல் நம் உடலில் உள்ள நீரின் தேக்கம் எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் நோய்க் கிருமிகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அது கட்டியாகவோ, கல்லாகவோ அல்லது ரத்த ஓட்டத்தை அடைக்கும் ஒரு செயலை ஏற்படுத்தும். ஜாதக கட்டத்தில் நோயைத் தரக் கூடிய காரக கிரகத்தோடு- அதில் அழுக்கையும், கிருமியும் ஏற்படுத்தும் கிரகமான சனி / ராகு தொடர்பு பெற்றால் அவருக்கு வெவ்வேறு தொற்றுகள், பாக்டீரியா வைரஸ் வளரும். அது உடலுறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க செய்துவிடும். அது உயிர்க்கொல்லி நோயாக மாறும் தன்மை கொண்டது.

கேன்சர் மற்றும் மரணத்திற்கு நிகரான நோயை ஏற்படுத்தும் முக்கிய பங்கு சுப கிரகமான குருவிற்கு உண்டு. ஒரு நல்லவர் கெட்டவராவது என்பது பயங்கரமான வில்ல தன்மையை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து செயல்படுத்துவார். இவர் நல்லவர் என்றாலும் நோயின் தாக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர், இதுவும் நன்று என்று கூறலாம். குருவுடன் சேரும் கிரகம் நன்மை செய்தாலும் மறுபக்கம் பாதிப்பை ஏற்படுத்துவார். ஜாதகருக்கு குரு அவயோகராகவோ அல்லது பாவ ஸ்தானத்தில் ராகு, கேது, சந்திரன் மற்றும் செவ்வாய் தொடர்பு பெரும்பொழுது புற்றுநோய் போன்ற நோய்களை கொடுக்கும். குரு கட்டிகள் முக்கியமாக கொலஸ்ட்ரால் கட்டியின் முக்கிய காரகர். குருவின்  நட்சரத்தில்  செவ்வாய், செவ்வாய்  நட்சத்திரத்தில் குரு இருப்பது நோயின் தாக்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குருவால் யோகம் என்று சொல்லும் - செல்வம், சேமிப்பு கிடைக்கும் அதே சமயம் அவருக்கோ அல்லது குடும்ப உறுப்பினருக்கோ பெரிய வைத்திய செலவு ஏற்படுத்தும்.நெருப்பு கிரகத்தோடு குரு சேர்க்கை: குரு செவ்வாயை சேர்க்கை பெற்ற கிரகத்தை சூரியன் பார்ப்பது  அல்லது குரு சூரியன் சேர்க்கை பெற்றதை செவ்வாய் தொடர்பு பெரும் பொழுது அல்லது நெருப்பு கிரகத்தை குரு சேர்க்கை பெறும்போது நோயின் தீவிரம் மரண கட்டத்தை நோக்கி செல்லும். நோய் தீவிரத்திற்கு நெருப்பு ராசிகளும் உறுதுணையாக இருக்கும். ராசி பலன்களில், குருவின் பலன்கள் சொல்லும் போது, முக்கியமாக அவரின் நல்ல சேர்க்கை என்று ஜோதிடர்கள் சொல்லும்பொழுது அதிக மதிப்பெண் கொடுப்பார்கள். பல காலமாக தெரியாத மறைந்து இருந்த நோய் - கோச்சார  குருவின் பார்வை என்பது நோயின் தாக்கத்தை வெளியே கொண்டுவரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுவும் குருவுடன் சேர்ந்த பாவிகள் பார்க்கும் பொழுது அமைதியாக இருந்த  உயிர்க்கொல்லி நோயின் தன்மை தன்னுடைய சுய ரூபத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும். அதே சமயம் அந்த முக்கிய கிரகங்களில் தசா புத்திகள் தன்னுடைய வேலையை  செய்து முடித்துவிடும். 

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் முதன்மை நோய் என்பது 6ம் பாவத்தில் நிற்கும் கிரகம், 6ம்அதிபதி மற்றும் செவ்வாய் ஆவார். அவற்றோடு அவர்களை பாவர்கள் தொடர்பு என்பது முக்கிய விதி. அவற்றோடு மிக முக்கியமான ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் தொடர்பு கட்டாயம் தேவை. ஜாதகருக்கு 6,8ம் அதிபதிகள், லக்னாதிபதி அல்லது சந்திரனுடன் சேர்ந்தாலோ தொடர்பு பெற்றாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும். ஒருவரின் லக்கினாதிபதியோ, லக்கின புள்ளியில் இருக்கும் நட்சத்திர அதிபதி, சந்திரன் மற்றும் குருவோ பலமாக இருந்தால் அல்லது அவர்கள் அதிக பரல்கள் பெற்றிருந்தால் புற்றுநோய் அல்லது உயிர்க்கொல்லி நோய்களினால் பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் சுலபமாக வெளி வந்துவிடுவார்கள்.

வர்கோத்தமம் பெற்ற கிரகங்கள் காரகத்தின் இலக்கு சுலபமாக முடியும். உதாரணமாக செவ்வாய் ராகு என்பது அறுவை சிகிச்சை செய்வதைச் சொல்லுகிறது. இந்த காரக கிரகம் வர்கோத்தமம் பெற்றால் ஒருவரின் பிணியை டாக்டரால் குணப்படுத்த முடியும் - என்று அழுத்தமாக மனதில் உணர வைக்கும். முக்கியமாக லக்னத்தோடு தொடர்புடைய கிரகம் வர்கோத்தமம் பெற்றால் நன்று. உதாரணமாக கடகம் என்பது இருதயத்தைக் குறிக்கும். ஒருவருக்கு மேஷ லக்கினம், செவ்வாய் கடகத்தில் வர்கோத்தமம், இவருக்கு இருதயத்தில் பிரச்னை ஏற்படும். அதன் தசை புத்தியில் இல்லையென்றால் வெளிப்படாது.

மிருத்யு பாகையில் (குறிப்பிட்ட ராசியில் உள்ள குறிப்பிட்ட பாகை) அமைந்த கிரகத்தின் காரகத்துவம், ஆதிபத்தியம் பெரிதும் பாதிப்படையும். மிருத்யு பாகையில் உள்ள ராசியில் ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட அளவில் அமைந்திருந்தால், அது ஒரு இறந்த கிரகமாகக் கருதப்படுகிறது. அதுவும் ஜாதகரின் லக்கினத்தோடு நோயைக் குறிக்கும் அதிபதிகள் மிருத்யு பாகையில் இருந்தால் தீராத வியாதி என்னும் தீய பலனைக் கொடுக்கும். மருத்துவச் சிகிச்சை தரும் காலகட்டத்தில் ஜாதகரின் ராசி மற்றும் லக்கின தொடர்பு பெரும் பாதகாதிபதி + மாந்தி சேர்க்கை பெரும்பொழுது - உயிர் பயத்தைக் காட்டும்.

நோய்ப் பாதிப்பு: முதன்மை வர்க்க சக்கரமான ராசி கட்டத்தில் ஒருவருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதா என்று பார்க்கலாம். நோயின் ஆதிமூலம் திரேக்காணம் (D3) மற்றும் நோயின் தீவிர தாக்கம் ஷஷ்டாம்சம் (D6) சொல்லும். லக்கினத்தில், 6ம் அதிபதி (or) ஆறில் நிற்கக் கூடிய கிரகம், எந்த பாவத்தில் இருக்கோ மற்றும் தொடர்பு பெறுகிறதோ- அந்த பாவத்தில் உள்ள உறுப்பில் நோயின் பாதிப்பு இருக்கும் என்பதை வர்க்க சக்கிரம் சொல்லிவிடும். அது வியாதியைக் கொடுக்காமல் போகாது. உயிர்க்கொல்லி மற்றும் குணமே ஆகாத நோய் - ராசி கட்டத்தில் உள்ள நோய் D6 சார்ட்டில் அதே இடத்தில இருக்கும் பொழுது நோயின் ஆணிவேர் அங்கேயே இருக்கும் அசைக்க முடியாது. இவர்களை அப்படியே விடக்கூடாது தொடர் சிகிச்சை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ராசியோடு திரேகாணதிபதி - வலிமையான மாரகாதிபதி 2,7,8,11 பாவங்களின் தொடர்பு பெற்ற புள்ளிகள் மாரகத்தை ஏற்படுத்தும்.

மருத்துவ ஜோதிடத்திற்கு முக்கிய பங்கு வர்க்க சக்கரம்: பராசர மகரிஷி நமக்கு பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு கட்டத்தில் உள்ள பாவகத்தையும் அவற்றின் காரகத்தையும் பல்வேறு வகையான வர்க்க சக்கரங்களில் உள்ளடக்கி பலன்களாக சொல்லப்படுகிறது. வர்க்க சக்கரத்தில் ராசிகட்டம்(D1) மற்றும் நவாம்சம் (D9) அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முக்கியமாக ஒவ்வொரு வர்க்க சக்கரமும் முக்கிய பிரிவினையை தெளிவுபடுத்தும். உதாரணமாக பூர்வீக சொத்து, திருமணம், குழந்தை, வீடு, செல்வம், நோய், தீவிர நோய், கர்மாவின் நிலை, ஆயுள், தெய்வங்கள் வழிபாடு, பாக்கியம் என்று இன்னும் பல்வேறு சக்கரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருவரின் திரேக்காணத்தில் (D3) 12 கட்டத்தில் உள்ள ஒவ்வொரு ராசி கட்டத்திலும் 3 பிரித்து 36 திரேக்காணங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒரு ராசிக்கு முதல் திரேக்காணம், 2வது திரேக்காணம், மற்றும் 3வது திரேக்காணம் என்று பிரித்து, அது காலபுருஷ தத்துவப்படி அங்கே நோயின் உடல் பாகத்தைக் குறிப்பிடப் பட்டிருக்கும். இவற்றில் முக்கியமானது அஷ்டமாதிபதி மற்றும் 22 திரேக்காண அதிபதி நோயின் முடிவை சொல்லுபவர். இதற்கு தனி கணித முறை உண்டு. ஒருவருக்கு நோயின் தாக்கம் என்பதை D3, D6 தெளிவு படுத்தும். அஷ்டாம்சம் (D8) என்பது கண்டதைக் குறிக்கும். கண்டத்தின் முக்கிய பங்கு பெரும் கிரகக்கூட்டு யார் என்பதை முதல் திரேக்காண லக்கினம், அதற்கு (8ம் வீடு) 22வது திரேக்காணம் மரணத்திற்கு நிகரான கண்டதைச் சொல்லும். மாரக அதிபதி தசை புத்தி வந்தால் மட்டுமே பயப்பட வேண்டும்.

நோயின் வேகம்: ஒருவருக்கு முதல் திரேக்காணத்தில் (0-10º) வேகமான நெருப்பு கிரகங்களான சூரியன் செவ்வாய் இருந்தால் நோயின் தன்மை மற்றும் கிருமிகள் தன்மை அதிவேகமாக வளரும் மற்றும் நோயும் அவ்வாறே வேகம் கொடுக்கும். அதேபோல் 2ம் திரேக்காணத்தில் -குரு சுக்கிரன், 3ம் திரேக்காணத்தில் சனி சந்திரன் வேகம் வெளிப்படும் தன்மை கொண்டது.

உதாரண ஜாதகம்

சிறுவிளக்கம்

உதாரணமாக ஒருவர் துலா லக்கினம், சுக்கிரன் ராகு மீனத்தில், 6ம் வீட்டுக்கு ஒரு நோயை தருகிறார் என்று ராசி கட்டம் சொல்லுகிறது. லக்கினாதிபதி சுக்கிரன் மற்றும் லக்கின சாரதிபதி ராகு, மீனத்தில் 6ல் உச்சத்தில் ராகுவுடன் இருப்பது, அங்கு சந்திரன் குரு கேது பார்வை நல்ல நிலை இல்லை. இவரின் தீவிர நோயைக் குறிக்கும் வர்க்க சக்கரத்திலும் சுக்கிரன், செவ்வாய் குரு கேது தொடர்பு இருக்கிறது. முக்கியமாக லக்கினத்திலிருந்து 22 திரேக்காணம் புதன். புதன் இவருக்கு முளையில் உள்ள நரம்பு மண்டல பகுதியில் உள்ள கண்டத்தைக் குறிக்கிறது. இவருக்கு சிறுவயதில் சரியான மருத்துவச் சிகிச்சை தராததால் இன்றைய தசை புத்தியில் பாதிப்பு பன்மடங்கு பெருகி ஒவ்வொரு உறுப்பாக பாதிக்க ஆரம்பிக்கிறது. கோச்சார மீனத்தில் குரு வரும்பொழுது நோயினை வெளிப்படுத்தியது, ராகு தொற்று அதிகமாவதையும், பெரிய அறுவைசிகிச்சையும், குறிகாட்டுகிறது. தற்பொழுது அவருக்கு சனி தசை- சுக்கிர புத்தி -சூரியன் அந்தரத்தில். நாம் இங்கு உச்ச சுக்கிரன் நல்ல பலனைத் தருவார் என்று சொல்ல முடியாது. உச்ச சுக்கிரன், ராகு +குரு கேது சேர்க்கை பார்வை உயிர்க்கொல்லி நோய் கட்டாயம் கொடுக்கும். அது கேன்சர் நோயாக மாறும்.

பரிகாரம்

இந்த கலியுகத்தில் கேன்சர் என்பது முக்கிய கொடிய நோய் படிப்படியாக நிறைய சதவீதம் வர ஆரம்பித்துவிட்டது. எல்லா வயதினரும் உடற்பயிற்சியுடன், சரியான அளவில் பாரம்பரிய சிறுதானிய உணவு உண்ண வேண்டும். முடிந்தவரை வெளி உணவுகளைச் சாப்பிடக் கூடாது. நோயின் தன்மை குறைய அவரவர் ஜாதகத்தில் நோயை நிவர்த்தி செய்யக் கூடிய தெய்வங்களையும் மற்றும் அவரவர் குலசாமியையும் வழிபாடு செய்வது நல்லது. தேய்பிறை காலத்தில் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்குப் பிடித்த நிறத்தில் வஸ்திரம், மலர்கள் கொண்டு அர்ச்சனை மற்றும் தீபம் போட்டு வழிப்படலாம். நோய் நிவர்த்தி தெய்வங்கள் என்பது பிரத்தியங்கிரா தேவி, கருடாழ்வார், அனுமன், சரபேஸ்வரர் மற்றும் சில உக்ர தெய்வங்கள் மருத்துவத்திற்கு வழிகாட்டும். ஒருசிலருக்கு பரிகாரங்களை நிறுத்தாமல் திரும்பத் திரும்ப செய்ய வேண்டியிருக்கும்.

ஜாதகத்தில் நிறைவுபெற்ற யோக கிரகங்கள் இருந்தால் அவருக்கு ஆசீர்வாதம் இல்லை என்று அர்த்தம். இவர்கள் சரியான குருமார்கள், பெற்றோர் மற்றும் மூத்தவர்களுக்கு உதவி, அவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். ஜாதகரின் ஆயுள் பலத்திற்கு ஒருசில அற்புதங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com