எண்ணூர் அன்னை சிவகாமி நகர், பீலிக்கான் முனீஸ்வரர் -அங்காள ஈஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னிகுண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள பீலிக்கான் முனீஸ்வரர் -அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் ரூ.1.5 கோடி செலவில் 45 அடி உயர அங்காள ஈஸ்வரி சிலையும், 43 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையும் வடிவமைக்கப்பட்டு கடந்த 20 -ஆம் தேதி பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 52 -ஆவது ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் திருவிழாவையொட்டி எண்ணூர் விரைவு சாலையில் பாரதியார் நகர் முதல் சின்னக்குப்பம் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு: இவ்விழாவையொட்டி 100 -க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழு தலைவர் தம்பியா, செயலாளர் தனபாலன், கிராம நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜெயராமன், தியாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.