திருச்சானூரில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அவர்களுக்கு ஏற்ற அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ.75 லட்சம் செலவில் கோயில் அருகில் புதிய கட்டடத்தைக் கட்டி அதை திங்கள்கிழமையன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அந்தக் கட்டட வளாகத்தில் நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்று, தேவஸ்தானத்தின் திருப்பதி செயல் அதிகாரி போலா பாஸ்கர் கட்டடத்தை திறந்து வைத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இக்கட்டடத்தின் தரை தளத்தில் பக்தர்கள் உடமைகளை வைக்கும் மையமும், காலணிகள், கைபேசி ஆகியவற்றை வைக்கும் மையமும் செயல்படும். முதல் தளத்தில் தேவஸ்தான துணை அதிகாரி அலுவலகமும், இரண்டாவது தளத்தில் கருத்தரங்க அறை உள்ளிட்டவையும் செயல்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை அருகில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி பவனம், விரைவில் பகத்ர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் திருச்சானூரில் உள்ள மாடவீதிகளின் விரிவாக்கப் பணிகள் பக்தர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சானூரில் உள்ள கண்டசாலா சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து வாகனங்கள் கோயிலுக்கு முன் வருவதைத் தடுத்து பூடி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








