குழந்தைப்பேறு கிடைத்த பிறகே இல்லற வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறுகிறது. தெய்வத்திற்கு சமமாக கருதப்படுபவர்கள் குழந்தைகள். என்னதான் பணவசதி இருந்தாலும், எத்தனை செல்வங்கள் இருந்தாலும் மழலை செல்வம் இல்லையென்றால் அவன் பரம ஏழையாகத்தான் கருதப்படுகிறான். வாழ்வில் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும், குழந்தையின் மழலையைக் கேட்கும்போது, அத்தனை துன்பங்களும் பஞ்சுபோல் பறந்துவிடும்.
உடல் மற்றும் மனநலம் நிறைந்த குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். ஆனால், ஒரு சிலருக்கு பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி நன்றாக இருந்தாலும், அடிக்கடி நோய் தாக்கம் ஏற்பட்டு மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது.
நம்மால் பிறருக்கு தான தர்மங்கள் செய்யமுடியாவிட்டாலும், யாருக்கும் கெடுதல், பாவம் செய்தல் கூடாது. அது நம் சந்ததியினரையும், நமக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளையும் பாதித்துவிடும் இது ஜோதிட ரீதியான உண்மையாகும்.
குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருக்க நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
• குழந்தைகள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சந்தானலட்சுமியின் படத்தை வைத்து வாசனை மலர்களைச் சூட்டி, சாந்த லட்சுமிக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட்டு வரலாம்.
• குழந்தைப்பேறு அருளும் குருபகவானை வியாழன்தோறும் மஞ்சள் நூலில் 27 கொண்டைக்கடலைகள் கோர்த்த மாலையை குருபகவானுக்கு சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி வருவதால் குழந்தைகள் உடல்நலம் தேறும். நோய் வராமல் குருபகவான் அருள்புரிவார்.
• செவ்வாய்க்கிழமைகளில் பால முருகன் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதால் உடல்நலம் நன்றாக இருக்கும்.
• திங்கட் கிழமைகளில் சிவன் கோயில்களில் பால் அபிஷேகம் செய்து வர நோய்கள் அகலும்.
• குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கப் பசுமாடுகளுக்கு அகத்திக் கீரை, புல், வாழைப்பழத்தை வழங்கலாம்.
• செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், குழந்தைகளுக்குக் கட்டாயம் திருஷ்டி கழிக்க வேண்டும்.
இவ்வாறு செய்துவந்தால் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள்.