தாமிரவருணி புஷ்கரம் தொடர்பான விழிப்புணர்வு ரத யாத்திரையை காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம், தாமிரவருணி ஆற்றில் நடைபெறவுள்ள மகா புஷ்கர விழாவையொட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு ரத யாத்திரை காஞ்சிபுரத்தில் தொடங்கியது. இதனை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கனமழை காரணமாக சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மழை நேரத்தில் தேர்தலை நடத்தினாலும், எதிர்க்கட்சியினர் குறை கூறுவது வழக்கமானது என்றார்.
அதைத் தொடர்ந்து, பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் முன்னிலையில் திரளானோர் ஓம் எனும் வார்த்தை பொறிக்கப்பட்ட கொடியை ஏந்தியபடி சென்றனர். அவ்வாறு ரத யாத்திரைக்கு முன்பு கொடியை ஏந்தி செல்லக் கூடாது என போலீஸார் கூறி, தடுத்து நிறுத்தினர்.
சிறிது நேர வாக்குவாதத்துக்குப் பிறகு, விழிப்புணர்வு ரதம் புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து கே.டி.ராகவன் கூறுகையில், போலீஸார் உள்நோக்கத்துடன் எங்களைத் தடுக்க முயற்சித்தனர். பாஜக தலைமை எடுக்கும் முடிவின்படி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். டி.டி.வி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையிலான கருத்துகள் முரண்பாடாக உள்ளன. அது குறித்து கருத்து கூற இயலாது என்றார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாவட்டத் தலைவர் செந்தமிழரசு, கோட்டப் பொறுப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட திரளான பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










