திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணி திருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வள்ளியம்மனுக்கு நடைபெற்ற குடவருவாயில் தீபாராதனை. 
வள்ளியம்மனுக்கு நடைபெற்ற குடவருவாயில் தீபாராதனை. 
Updated on
2 min read


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணி திருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் கடந்த ஆக. 30-ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளிச்சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். மாலையில் மேலக்கோயிலில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 
6-ம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். புதன்கிழமை ஏழாம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ம் தேதி எட்டாம் திருநாளை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பகல் 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை வந்தடைகிறார்.
மேலும், வரும் 7-ம் தேதி ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு இரவு சுவாமி, தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடைகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
நடைதிறப்பு நேரம்: விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வரும் 5-ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கும் மற்ற திருவிழா நாள்களில் வழக்கம்போல அதிகாலை 5 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com