2018-19ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி நிகழும் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18-ம் தேதி அக்டோபர் 04-ம் தேதியன்று நிகழ உள்ளது. குருபகவான் துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார்.
கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசீர்வாதத்தைத் தான் குரு பலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனைத் தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
அக்டோபர் 4-ம் தேதி பெயர்ச்சியாகவிருக்கும் குருபகவான் 12 ராசிக்காரர்களுக்கும் எந்த இடத்தில் இருந்து அருள்பாலிக்கப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மேஷ ராசிக்கு குருபகவான் 8-ம் இடத்திலும், ரிஷப ராசிக்கு குருபகவான் 7-ம் இடத்திலும், மிதுன ராசிக்கு 6-ம் இடத்திலும், கடக ராசிக்கு குருபகவான் 5-ம் இடத்திலும், சிம்ம ராசிக்கு 4-ம் இடத்திலும், கன்னி ராசிக்கு 3-ம் இடத்திலும், துலாம் ராசிக்கு 2-ம் இடத்திலும், விருச்சிக ராசிக்கு 1-ம் இடத்திலும், தனுசு ராசிக்கு 12-ம் இடத்திலும், மகர ராசிக்கு 11-ம் இடத்திலும், கும்ப ராசிக்கு 10-ம் இடத்திலும், மீன ராசிக்கு குருபகவான் 9-ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
* குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
* குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலைக் கிடைக்கும்.
* குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
* குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் அமையும்.
* குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
* குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
* குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
* குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
* குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
* குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
* குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
* குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.