தில்லை பெருங்கோயில் சைவ சமயத்தின் தலைமையகம். இறைவன் ஓயாது நடனம் புரியும் முதல் தலம். தேவர்களும், சித்தர்களும், நாயன்மார்களும் தங்கிக் கண்டு தொழுது பாடிப் பரவி பஞ்ச பூதங்களுடன் ஐக்கியமாகி நின்ற தலம்.
இப்பெருமைமிகு திருக்கோயிலை பல அரசர்களும், அடியார் பெருமக்களும் பல்வேறு காலகட்டங்களில் பல விதங்களில் ஒளியூட்டி மகிழ்ந்துள்ளதை வரலாற்றின் பக்கங்கள் பதிவு செய்துள்ளன.
திருமாளிகைத்தேவர் அருளிய ஒளிவளர் விளக்கே எனும் திருவிசைப்பா அருளப்பெற்ற இத்திருத்தலத்தினை இக்காலகட்டத்தில் ஒளியூட்டி மகிழ்ந்தவர் சிவநேயச் செல்வர் திரு.ராமச்சந்திரன் அவர்கள்.
நைஜீரியாவில் வேலைசெய்யும், சென்னையைச் சேர்ந்த ராமசந்திரன் அவர்களும் அவரது மனைவியார் மருத்துவர். ராஜலட்சுமி அவர்களும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சூரியஒளி மின்சக்தி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
சிதம்பரத்தில் உள்ள பொது தீட்சிதர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் சூரிய ஒளி மூலம் மின் சக்தி பெறும் சாதனங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இயக்கி வைக்கப்பட்டது.
இதுபோன்று சிவன் கோயிலில் சூரியஒளி மின்சக்தி வழங்கும் ஏற்பாட்டினை ராமச்சந்திரனின் 3-ஆவது முறையாகச் செய்துள்ளார்.
இதற்கு முன், வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் திருக்கடையூர் ஆலயங்களிலும் இதுபோன்று சூரியஒளி மூலம் மின்சக்தி பெறும் சாதனங்களை நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.