திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை மாலை விமரிசையுடன் தொடங்கியது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி, தேவஸ்தானம் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை முதல் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
7 நாள்கள் நடைபெற உள்ள இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு திருக்கோயில் எதிரே உள்ள திருக்குளத்தில் கோதண்டராம சுவாமி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் திரண்டனர். திருக்குளக்கரையில் அமர்ந்தபடி, கற்பூர ஆரத்தி எடுத்தனர்.
விழாவையொட்டி, திருக்குளம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிக்ஷித் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தினர் சார்பில், ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.