

திருவண்ணாமலை: மார்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து உற்சவர் ஸ்ரீபெரிய நாயகர், ஸ்ரீபராசக்தி அம்மன் எழுந்தருளினர்.
உற்சவர், மூலவர் சுவாமிகளை அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவெம்பாவை சொற்பொழிவு: உண்ணாமுலையம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெற்றது. நல்லாசிரியர் சீனுவாசவரதன் சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து, மார்கழி மாதம் முழுவதும் இந்த சொற்பொழிவு நடைபெறுகிறது.
நடை திறப்பு நேரம் மாற்றம்:
கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டபோது காலை 6.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மார்கழி மாதப் பிறப்பையொட்டி மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5.30 மணிக்கே நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.