Enable Javscript for better performance
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்): கே.சி.எஸ் ஐயர் கணித்தது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்): கே.சி.எஸ் ஐயர் கணித்தது

    By   |   Published On : 26th December 2020 12:55 PM  |   Last Updated : 01st January 2021 12:26 PM  |  அ+அ அ-  |  

    astrology-

    ஆங்கிலப் புத்தாண்டு பலண்கள்

     

    2021-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் (முதல் நான்கு ராசிகள்) கணித்து வழங்கியுள்ளார். 

    மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

    01.01.2021 முதல் 30. 06. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது உங்கள் அனுபவ அறிவு பயன்படும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகளும் தீர்ந்து அவைகளிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். 

    குழந்தைகளால் பெருமை அடைவீர்கள் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.

    வெளிவட்டாரத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். இருப்பினும் சில போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு மூட்டுகளில் பிடிப்பு ஏற்படலாம். உடல் நலமும் மன வளமும் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். ஆகார விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைக்கத் தொடங்குவீர்கள். உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து காணப்படும். 

    01.07. 2021 முதல் 31. 12. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தோரும் உங்களின் நல்ல மனதைப் புரிந்து கொள்வார்கள். அவர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்; அவர்களாலும் சில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். 

    சமுதாயத்தில் உங்கள் பெயர், அந்தஸ்து உயரும். சொல்வாக்கு செல்வாக்காக உயரும். பொறுமையுடன் உங்கள் கடமைகளை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் வசூலாகும். குழந்தைகளுக்கும் தக்க ஆலோசனைகளை வழங்குவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் சிறப்பாகத் தொடரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

    உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு சிறப்பாக இருப்பதால், செலவினங்களும் சற்று கூடுதலாகவே இருக்கும். நிறைய சுபச் செலவுகள் ஆகும். எனினும் சற்று சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உழைப்பு சற்று கூடுதலாகவே இருக்கும்.  

    வியாபாரிகளின் திட்டமிட்ட முதலீடு சரியான இலக்குகளை எட்டும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளித்து வெற்றி அடைவீர்கள். 

    விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் அதிகம் இருப்பதால் விளைச்சல் நன்றாக இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக கூடுதல் செலவு செய்ய நேரிடும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 

    அரசியல்வாதிகளின் சொற்படி தொண்டர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளும் உங்கள் செயலாற்றும் திறனைக் கண்டு அதிசயிப்பார்கள். 

    கலைத்துறையினரின் திறமைகள் வெளியே அதிகம் தெரிய ஆரம்பிக்கும். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்பவும் கிடைக்கும். உங்களின் சீரிய முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.  

    பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். யாரிடமும் அதிகமாகப் பேசாதீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். எதற்கும் "சரி சரி' என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்களானால் எந்த வம்பும் ஏற்படாது. ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். 

    மாணவமணிகள் உழைக்க சோம்பேறித்தனப்படாதீர்கள். உழைப்பைக் கூட்டினால் மதிப்பெண்கள் அதற்கேற்றாற்போல் கூடும். பெற்றோர்களின் ஆதரவினால் உங்கள் நியாயமான கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  

    பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

    *****

    ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

    01.01.2021 முதல் 30. 06. 2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். பழையகால சண்டை சச்சரவுகள், பூசல்கள் முடிவுக்கு வரும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். செய்தொழிலில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். முடங்கிப் போன காரியங்கள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். 

    குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப காரியங்களும் நடைபெறும். திட்டமிட்ட வேலைகளில் உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர்கள். குழந்தைகளை சரியான பாதையில் வழி நடத்துவீர்கள். சமூகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். போட்டி பொறாமைகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். 

    பிறரின் ஏளனப் பேச்சுக்குத் தக்க பதிலடி கொடுப்பீர்கள். அதேசமயம் எவரிடமும் உரிமை எடுத்துக்கொண்டு அனாவசிய பேச்சுகள் பேச வேண்டாம். எவருக்கும் கடன் கொடுப்பதோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. எந்த ஆவணத்திலும் கையெழுத்திடும் முன்பாக அதை முழுமையாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 

    01.07. 2021 முதல் 31. 12. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்துவீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அனைத்து செயல்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பீர்கள். பொருளாதார வளம் உயர்வதற்கான வழிகளைப் பின்பற்றுவீர்கள். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டில் இருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். புதிய வருமானத்தால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். உங்கள் செயல்களில் விறுவிறுப்பு கூடும். 

    நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாது கடினமாக உழைப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்திலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக் கொள்ளும் காலகட்டமிது என்றால் 
    மிகையாகாது.

    உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். சக ஊழியர்களை உங்களின் அமைதியான அன்பான அணுகுமுறையால் கவர்வீர்கள். சிலருக்கு குறுகிய காலப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். 

    வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெற சற்று காலதாமதம் ஏற்படும். அகலக்கால் வைக்காதீர்கள். சிலருக்கு வழக்கு வியாஜ்ஜியங்களுக்காக செலவு செய்ய நேரிடும். 

    விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை பன்மடங்கு பெருக்குவீர்கள். கால்நடை தீவனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். குறுகியகாலப் பயிர்களால் விளைச்சல் பெருகி லாபம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். 

    அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு இரண்டும் அதிகரிக்கும். கட்சியில் அந்தஸ்தான பொறுப்புகளைப் பெறுவீர்கள். மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். 

    கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். 

    பெண்மணிகள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். சிலருக்கு புது வீட்டுக்கு மாறும் வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் சொத்தில் பெரிய பங்கு உங்கள் கைக்கு வந்து சேரும். 

    மாணவர்கள் இந்த புத்தாண்டில் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயத்தைத் தவிர்க்க யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சிகளைச் செய்யவும். புத்தாண்டில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். 

    பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

    *****

    மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

    01.01.2021 முதல் 30. 06. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் கடுமையாக உழைத்து செயலாற்றுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பெயரும் புகழும் உயரும். அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சுப காரியங்களையும் இல்லத்தில் நடத்தி மகிழ்வீர்கள். மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  

    குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் பெரிதாக ஏற்படாது. சகோதர, சகோதரிகளும் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். செய் தொழிலில் புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் கூடும். உங்கள் பேச்சில் கண்ணியம் காப்பீர்கள். அதேநேரம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றி மறையும். ஆகார விஷயங்களிலும் கவனமாக இருப்பீர்கள். மற்றபடி உங்கள் செயல்களை நேர் வழியில் செய்து முடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது. 

    01.07. 2021 முதல் 31. 12. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை அனைவரும் பாராட்டுவார்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். அரசு உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

    உற்றார் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நீங்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். வீட்டிலும் வெளியிலும் உங்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் இன்பம் நிறைந்து காணப்படும்.

    எதிர்காலப் பாதுகாப்பிற்காக வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமிக்கத் தொடங்குவீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள். அதேநேரம் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்கக் கூடாது. எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம். மற்றபடி ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு உண்டாகும். வயதானவர்களுக்கு பேரக் குழந்தைகளைப் பார்க்கும் யோகம் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

    உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் தொடரும். புதிய பொறுப்புகளில் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். 

    வியாபாரிகள் உங்கள் போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளைச் சாதுர்யமாகத் தகர்ப்பீர்கள். கூட்டாளிகளை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கலாம். ஆனால் எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். 

    விவசாயிகளின் குடும்பத்தில் சிறிது வசதி வாய்ப்புகள் தேடி வரும். பாசன வசதிகள் மூலம் விவசாயத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய குத்தகைகளை தற்போது எடுக்கவேண்டாம்.  

    அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடத்தினர் ஆதரவாக இருப்பார்கள். அறிமுகமில்லாதவர்களிடமிருந்து இக்கட்டான நேரத்தில் உதவிகளைப் பெறுவீர்கள். சிறிது மன அமைதியின்மையையும், வீண் அலைச்சலையும் சந்திக்க நேரிடும். 

    கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது செயலாற்றும் திறன் கண்டு அனைவரும் பாராட்டுவார்கள். 

    பெண்மணிகள் தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலத்தைப் பெறுவீர்கள். கணவர் குடும்பத்தாரிடம் உறவு நல்ல முறையில் இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். 

    மாணவமணிகள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். தினமும் கடினமாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

    பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும்.

    *****

    கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

    01.01.2021 முதல் 30. 06. 2021 வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உங்களைக் குறை கூறிக் கொண்டிருந்தவர்கள் மனம் மாறி இணக்கமாகப் பழகத் தொடங்குவார்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கி விடும். வழக்குகளும் உங்களுக்கு சாதகமான முறையில் தீர்ப்பாகும். குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் நிரபராதி என்று விடுவிக்கப்படுவார்கள். உடல் நலம், மன வளம் இரண்டும் சீராகவே தொடரும். தாய்வழி சொத்துகள் திரும்பக் கிடைக்கும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு செலவு செய்வீர்கள். குடும்பத்தாருடன் அன்பு, பாசம் அதிகரிக்கும்.

    உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

    01.07. 2021 முதல் 31. 12. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பை மற்றவர்களும் பாராட்டுவார்கள். சட்ட விஷயங்களில் கவனமாக இருப்பீர்கள். கணக்கு வழக்குகளையும் சரியாக வைத்துக் கொள்வீர்கள். வருமானம் படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை எட்டிவிடும். சிக்கலான விஷயங்களிலும் சரியான முடிவு எடுப்பீர்கள். சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். 

    உங்கள் ரகசியங்களை எக்காரணம் கொண்டும் எவரிடமும் வெளியிட மாட்டீர்கள். உங்களின் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியமும் சீராக இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். அனைத்து விஷயங்களிலும் முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்றி வெற்றி இலக்குகளை எட்டுவீர்கள்.

    இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்களின் வருகையும் அதிகரிக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

    உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் கவலைகள் அனைத்தும் பறந்தோடிவிடும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் உதவி பெற்று வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். பணவரவு சீராக இருக்கும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவு நிலை உண்டாகும்.

    வியாபாரிகள் உங்களது கூட்டாளிகளை நம்பாதீர்கள். வியாபாரத்தில் கடன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். முயற்சிக்குத் தகுந்த லாபம் கிடைக்கும்.

    விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள். சிலர் குறுகிய காலப் பயிர்களைப் பயிரிட்டு லாபத்தை அடைவீர்கள். பழைய கடன்கள் தீரும். 

    அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகள் சாதகமாக முடிவடையும். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். தொண்டர்கள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

    கலைத்துறையினரின் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். உங்கள் திறமையைப் பயன்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படுவீர்கள்.

    பெண்மணிகள் சரளமான பண வரவால் புதுப் புது ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குழந்தைகளுடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

    மாணவமணிகள் கடுமையாக உழைத்து சாதனைகளைச் செய்வீர்கள். உடல் நலம் பேண யோகா, பிரணாயாமம், உடற்பயிற்சி செய்வீர்கள். சில நேரங்களில் மனக்குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளவும்.

    பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp