குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 (துலாம் - மீனம்)

2023-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 (துலாம் - மீனம்)

2023-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். அடுத்த ஆறு ராசிகள் (துலாம் - மீனம்) வரை பலன்கள் . 

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சித்திரை முதல் புரட்டாசி வரையில் உள்ள காலகட்டத்தில் உங்கள் சிந்தனைத் திறனால் சிரமங்களைக் களைவீர்கள்.  கடுமையாக உழைத்து  தொழிலில் வெற்றியைக் காண்பீர்கள்.  குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களுக்கு அடித்தளம் அமைப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். தரும காரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். சிலர் புதிய வீடுகளுக்கு மாற்றம் செய்வார்கள். வழக்குகளில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அதே நேரம் பெற்றோரின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டி வரும். அரசு அதிகாரிகளும் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மற்றபடி முயற்சி செய்யாமலேயே சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும்.  உங்கள் மதிப்பு மரியாதைகள் அதிகரிக்கும். 

பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துக் கொள்வீர்கள்.  உங்கள் ஆலோசனைகள் நண்பர்களுக்கும் பயன்படும். உங்கள் காரியங்களில் மனமுதிர்ச்சியுடன் நடந்து கொள்வீர்கள். ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் மந்த நிலைமைகள் மாறி சுறுசுறுப்பு கூடும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். உங்கள் செயல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து விடுவீர்கள். வெளியூர்,  வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும். செலவுகள் கூடுமாகையால் அவைகளை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். மனதில் புதிய துணிவு, தைரியம் உண்டாகும். அதோடு மனதில் இருந்த சந்தேகங்களும் நீங்கி விடும். உடலிலும் பொலிவும் கூடும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சியைப் புரிந்துக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். 

ரிஸ்க் எடுத்து பங்கு முதலீடுகளிலும் ஈடுபடுவீர்கள். இதனால் பொருளாதார நிலையில் ஸ்திரத் தன்மையைக் காண்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். குழந்தைகளை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும். 

குரு பகவான் சஞ்சாரம் 

குரு பகவான் 22.4.2023 முதல் களத்திர நட்பு ஸ்தானமான மேஷ ராசியில் நேர் கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார்.  இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் உற்சாகம் நிறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில்  உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள்.  மன அழுத்தங்களைக் குறைத்து தெளிவாகச் சிந்திப்பீர்கள். 
வம்பு வழக்குகளிலிருந்தும் விடுபட்டு விடுவீர்கள். ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். அன்னை, மாமன் வழிகளில் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். 5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியில் வக்கிர கதியில் ( பின்னோக்கி ) சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். 

முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள். நீண்ட நாள்களாக தடைப்பட்டு கிடந்த பணம் வந்து சேரும். நண்பர்களிடம் பேசும்போது உறுதியுடன்  பேசுவீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசும் நபர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள்.  அதேநேரம் கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய முற்பட வேண்டாம்.

31.12. 2023 முதல் தமிழ்ப்புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் ரிஷப ராசியை நோக்கி நேர் கதியில் சஞ்சரிக்கிறார்.  இந்த காலகட்டத்தில் உங்கள் எண்ணங்களில் பிடிப்புடன் செயல்படுவீர்கள்.  உங்கள் துறையில் வெகுவாக முன்னேறுவீர்கள். மறைமுகச் சூழ்ச்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.  அரசிடம் பெரிய உதவிகளை எதிர்பார்க்க முடியாது. வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பேராசையின்றி செயல்படுவது நல்லது. குடும்பப் பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். 

ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை முறையே களத்திர நட்பு ஸ்தானம், ராசியிலும் பிறகு ஆண்டு இறுதி வரை ருணம்,  ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிலும், அயன ஸ்தானமான பன்னிரெண்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்கள்.  இந்த காலகட்டத்தில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

கௌரவப் பதவிகள் மூலம் செல்வாக்கு மேம்படும். அரசுத் தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். தீர்க்க முடியாமல் இருந்த நெடு நாள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். உங்களுக்கு நிலையான புகழும், பெருமையும் ஏற்படும். முக்கிய விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் தெளிவு பிறக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். அதே நேரம் வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவும். மேலும் எந்த விஷயத்திலும் அகலக் கால் வைக்க வேண்டாம்.

பரிகாரம் : விநாயகப் பெருமானை வழிபடவும்.

*******

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சித்திரை முதல் புரட்டாசி வரை  உள்ள காலகட்டத்தில் புதிய அனுபவங்களைப் பெற்று மனோ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களின் தெய்வ வழிபாட்டுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.  உங்கள் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்ற அந்தஸ்தையும் பெறுவீர்கள்.  எதிரிகள் தானாகவே விலகிவிடுவார்கள். முந்தைய காலத்தில் காணாமல்போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக் கொண்டு செயல்படுவீர்கள். வருமானத்தின் ஒரு பகுதியை அசையா சொத்துகளை வாங்க முதலீடு செய்வீர்கள். பெரியோரின் ஆசிகளைத் தேடி பெறுவீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைக்கத் தொடங்குவீர்கள்.

ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். போட்டிகளில் ஈடுபடும்போது சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும், ஆதாயம் உண்டாகும். பழைய கடன்களைப் படிப்படியாகக் குறைத்துவிடுவீர்கள்.  குடும்பத்தைவிட்டு விலகி இருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள்.  பூர்வீகச் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். சூழ்நிலைகளுக்கேற்ப உங்கள் செயல்முறைகளையும் மாற்றிக் கொள்வீர்கள். நேர்வழியில் சிந்தித்து உங்கள் காரியங்களைச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். 

உங்கள் செல்வநிலை உயர்வதுடன் செல்வாக்கும் உயரும். குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உங்கள் பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அதே நேரம் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளைக் குறைத்துகொள்வது நல்லது. உங்களின் பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். சமூகப் பணிகளில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்து மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

குரு பகவானின் சஞ்சாரம் 

குரு பகவான் 22.4.2023 முதல் மேஷ ராசியில் ருணம், யோகம், சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் நேர்கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் சற்று கூடுதலான பலன்களைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் முதலீடுகளில் செய்வீர்கள்.  திட்டமிட்டு சரியாகச் செயலாற்றுவீர்கள்.  கடினமாக உழைத்து லாபம் அடைவீர்கள்.  மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெற அடிக்கடி பயணங்களைச் செய்ய வேண்டிவரும். பழைய சொத்து விவகாரங்களில் இருந்த வில்லங்கம் விலகி, நன்மைகள் கூடும்.  சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

5.9.2023 முதல் 30.12.2023 வரை  குரு  மேஷ ராசியிலேயே வக்கிர கதியில் (பின்னோக்கி) சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உடன்பிறந்தோருடன் இணக்கமாகப் பணியாற்றுவீர்கள். சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள்.   நோய்கள் அண்டாது. உங்களின் தன்னம்பிக்கைகள் கூடும், திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அநாவசியமாக டென்ஷன் ஆகாமல் உங்கள் செயல்களைச் செய்து முடிப்பீர்கள்.

31.12.2023 முதல் தமிழ்ப்புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் ரிஷப ராசியை நோக்கி நேர்கதியில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் செயல்கள் துறையில் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். பங்கு சந்தையில் முதலீடுகளைக் குறைத்துகொள்ளவும். கடின உழைப்பை மேற்கொள்வதும், அதற்கேற்ற  வழிகளையும் வகுத்துகொண்டு சீரிய முறையில் செயல்படுவீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.

ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானம், அயன ஸ்தானத்தில் பிறகு பூர்வ புண்ணிய  ஸ்தானம் மற்றும் லாபஸ்தானத்திலும் தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை சஞ்சரிக்கிறார்கள்.  இந்த காலகட்டத்தில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். மன அழுத்தங்களுக்கு ஆறுதல் அளிப்பார்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.  உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துகொள்வீர்கள். மற்றபடி உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்கள் கருத்துகளைக் கேட்டு நடப்பார்கள். கடினமான வேலைகளையும் தொழிலில் ஏற்படும் போட்டிகளையும் திறமையாக வெற்றி கொள்வீர்கள். 

உங்களின் நடை, உடை பாவனைகளில் ஒரு உத்வேகம் உண்டாகும். வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். எதிர்பாராத பயணங்களால் குருட்டு அதிர்ஷ்டம் ஏற்படும். உடல் நலம், மன வளம் இரண்டையும் சிறப்பாகப் பேணுவீர்கள்.  அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு நற்பெயரை எடுப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் விஷயங்களைப் பிறர் அறிய எடுத்துச் சொல்லும் ஆற்றலும் உண்டாகும். பொதுநலப் பணிகளிலும் உங்களை 
ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

பரிகாரம் : ஸ்ரீராமரை வழிபடவும்.

*******

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலக்கட்டத்தில் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். யோகா, பிராணாயாமம் போன்ற சூட்சும கலைகளில் தேர்ச்சி பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கும் சென்று வருவீர்கள்.  சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். அதே நேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் இருந்து பொறுமை காக்கவும்.  நிதானத்துடன் விவேகத்தையும் கைக் கொண்டால் உங்கள் செயல்கள் திட்டமிட்ட இலக்குகளை எட்டும். நடையில் மிடுக்கும், முகத்தில் மலர்ச்சியுடனும் வலம் வருவீர்கள்.

உங்களின் நுண்ணறிவால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பிறரைப் பற்றிய புதிய ரகசியங்களையும் அறிய முற்படுத்துவீர்கள். தன்னடகத்துடன் போதுமென்ற மனதுடன் இருப்பீர்கள்.  குடும்பத்திலும் பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.  மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டில் வாழ்ந்து அபிவிருத்தியடைவீர்கள்.  இன்று எது முக்கியமோ அதை முழுமனதாகச் செய்து வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். அதே நேரம் எவரிடமும் வெளிப்படையாகப் பேசாதீர்கள்.

ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலக்கட்டத்தில் புதிய முதலீட்டில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். கெட்டவர்கள் தானாகவே விலகி விடுவார்கள்.  சிலர் இருக்கும் வீட்டிலிருந்து வசதியான வீட்டுக்கு மாறுவார்கள். பழைய தவறான முதலீடுகளையும் சீர்செய்வீர்கள். இதனால் வருமானமும் சீரடையும். உங்கள் புகழ், கௌரவம் கூடும். எதிர்பாராத வழியில் இறையனுபவம் கிடைக்கும். உங்களின் செயல்கள் துரிதமாக நடக்கும். 
குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் எண்ணங்களை மற்றவர்கள் சரியாகப் புரிந்துகொள்வார்கள். வருமானம் நல்ல முறையில் வந்தாலும் குறுக்கு வழியில் செல்ல மனம் விழையும். அதனைத் தள்ளிவைத்துவிட்டு நேர்வழியில் சென்று அபகீர்த்திகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய பொறுப்புகளில் தானாகவே தேடி வரும்.  அரசு அதிகாரிகளின் தொடர்பும் நல்ல முறையில் கிடைக்கும். கொடுக்க வேண்டிய கடன்களையும் திருப்பி அடைத்துவிடுவீர்கள். குடும்பத்துக்கும் சற்று கூடுதலாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். பண வருவாய் சீராகவே இருக்கும்.  எதிர்பாராத இடங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.

குரு பகவானின் சஞ்சாரம்

குரு பகவான் 22.4.2023 முதல் உங்கள் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான மேஷ ராசியில் நேர்கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் குழந்தைகளை அன்பால் அரவணைத்துச் செல்வீர்கள். மறைமுக, நேர்முக நெருக்கடிகள் என்று எதுவும் ஏற்படாது. மகிழ்ச்சிகரமான பயணங்களைச் செய்வீர்கள். தொழிலில் திடீர் திருப்பங்களும் உண்டாகும். பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.  சமுதாயத்தில் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். நெடுநாள் ஆசை ஒன்று நிறைவேறும்.  உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். தொழிலில் சில முக்கிய முடிவுகளையும் எடுப்பீர்கள்.

5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியில் வக்கிர கதியில் (பின்னோக்கி) சஞ்சரிக்கிறார்.  இந்தக் காலக்கட்டத்தில் பிடிவாதப் போக்கை விட்டுவிட்டு மென்மையான அணுகுமுறையைக் கடைபிடிப்பீர்கள். சூழ்நிலைக்கேற்ப உங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வீர்கள். ஒரு விஷயத்தை பல விதமாக யோசிப்பீர்கள். உங்கள் சமயோஜித புத்தியை பயன்படுத்தி மற்றவர்களை உங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள். அசையா சொத்துகள் வாங்க எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

குழந்தைகள் கல்வியில் சாதனைகளைச் செய்வார்கள்.  அரசிடம் எதிர்பாராத சலுகைகளும், பெருமைகளும் கிடைக்கும். தடைபட்டு நின்ற திருமண பேச்சுவார்த்தைகளைத் திறம்பட முடிப்பீர்கள்.

31.12.2023 முதல் தமிழ்ப்புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் ரிஷப ராசியை நோக்கி நேர்கதியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து செயல்களிலும் முந்தி நிற்பீர்கள். நண்பர்களின் பிரச்னைகளைûத் தீர்த்து வைப்பீர்கள்.  தாய் வழி உறவினர்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். அரசியலிலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.  குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்துகொள்வீர்கள்.

ராகு, கேது பகவான்கள் 28.11.2023 வரை மேஷம், துலாம், அதற்குப்பிறகு சுகம் மற்றும் தொழில் ஸ்தானங்களில் சஞ்சரிக்கிறார்கள்.  இந்தக் காலகட்டத்தில்   உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளை தைரியத்தோடு சந்திப்பீர்கள். சுணக்கமாக நடந்த விஷயங்களை விறுவிறுப்பாக நடத்தி முடிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டித்து திருத்துவீர்கள். மரியாதைக்குரிய நபரின் நட்பு கிடைத்து சந்தோஷமடைவீர்கள். அவர் மூலமாக அரசு வேலைகளில்  அனுகூலம் அடைவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தாண்டி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அனைவரிடமும் நற்பெயரை எடுப்பீர்கள்.  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வாங்குவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடவும்.

*******

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் சார்ந்துள்ள துறையில் சாதனைகளைப் படைப்பீர்கள்.  புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.  வருமானமும் இருமடங்காகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  உறவினர்கள். நண்பர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள்.  மனதில் ஊக்கத்தைக் கூட்டிக் கொண்டு பணியாற்றுவீர்கள். ஆகார விஷயங்களிலும் கவனமாக இருப்பீர்கள். நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் உங்கள் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.  

குடும்பத்தில் பாகப் பிரிவினை சுமுகமாக நடந்தேறும்.  அசையா சொத்துகளில் வருமானம் வரத் தொடங்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். எதிர்ப்புகள் மறைந்துவிடும். வம்பு வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குறைந்த உழைப்பில் அதிக ஆதாயங்களைப் பெறுவீர்கள்.  நடைமுறைக்கு சாத்தியமான விஷயங்களையே யோசிப்பீர்கள்.  உங்கள் வேலைகளையும் தேர்வு செய்து முடிப்பீர்கள்.  

ஐப்பசி முதல் பங்குனி வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். பொருளாதாரத்தில் படிப்படியான உயர்வைக் காண்பீர்கள். கலகலப்பாகப் பழகி மகிழ்ச்சியான தருணங்களை உண்டாக்கிக் கொள்வீர்கள்.  பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் உருவாகும்.  உடல் சோர்வுகள் நீங்கி உற்சாகம் பெருக்கெடுக்கும்.  மனஉறுதியோடு செயல்களைச் செய்து முடிப்பீர்கள்.   மதிப்பும் மரியாதையும் உயரும்.  மனதில் நினைத்த சில விஷயங்கள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளில் தெளிவு கிடைக்கும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.  சுப காரிய முயற்சிகள் ஈடேறும். சொத்துகள் வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  வாராக்கடன் வசூலாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.  வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். முக்கிய சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்டு வேகமாகப் பேசி செயல்படாமல் நிதானமாகச் செயல்படவும்.

குரு பகவான் சஞ்சாரம்

22.4.2023 முதல்  சுகஸ்தானத்தில் நேர்கதியில் 4.9.20223 வரை குரு சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் நிதானமும் பேச்சில் பொறுமையும் இருக்கும். தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள்.  உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் அனைவரையும் ஒரே மாதிரி நினைத்து கனிவாகப் பேசி அரவணைத்துச் செல்வீர்கள். அதோடு கர்வத்தையும் விட்டொழித்து நேர்மையாகப் பழகுவீர்கள்.  உழைப்பையும் ஓய்வையும் சமமாகச் செய்வீர்கள். வெளிப்படையாக உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். வருமானம் படிப்படியாக உயரும். பெற்றோர்  உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  தன்னம்பிக்கையுடன் தயாள குணமும் வெளிப்படும். ஆன்மிக ஈடுபட்டால் உங்கள் ஆத்ம பலம் கூடும். பரிகாரங்களுக்கும் கை மேல் பலன் கிடைக்கும்.  குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. 

5.9.2023  முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்கிர கதியில் (பின்னோக்கி) சஞ்சரிக்கிறார்.  இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகளை நேர்த்தியாகச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். உங்கள் கையிருப்பு கூடும். நண்பர்களின்ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள்.  பயணங்களின் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். போட்டிகளைத் தைரியமாக எதிர்கொள்வீர்கள்.  அரசு ஊழியர்களிடம்  உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். உடன்பிறந்தோரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். கண், வயிறு போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்க்க நேரிடும்.

31.12.2023 முதல் தமிழ்ப் புத்தாண்டு இறுதி வரை குரு பகவான் ரிஷப ராசியை நோக்கி நேர்கதியில் குரு சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில்  வீண் விரயங்கள், செலவுகள் மறையும், உடல் நலம், மன வளம் இரண்டும் மேம்பட யோகா, பிராணயாமத்தைச் செய்வீர்கள்.  பங்கு வர்த்தகத் துறையின் மூலம் சிறு ஆதாயங்களையும் பெறுவீர்கள். பொதுவாக, பொருளாதார வளம் மேம்படும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, மரியாதை உயரும். தொழிலுக்காக புதிய பயிற்சிகளையும் கற்றுகொள்வீர்கள். முக்கிய முடிவுகளையும் நன்றாகச்சிந்தித்து எடுப்பீர்கள்.

ராகு, கேது பலன்கள்  28.11.2023 வரை சுகஸ்தானம், தொழில் ஸ்தானத்திலும் அதற்குப் பிறகு தைரிய ஸ்தானத்திலும், பாக்யஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தொழிலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.  உறுதியான செயல்திறனால் நண்பர்களால் பாராட்டப்படுவீர்கள்.

புதிய வீடு கட்டுவதற்கு அச்சாரமிடுவீர்கள்.  சுப நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிப்பீர்கள். குடும்பத்திடம் அன்பைக் காட்டுவீர்கள்.  தொழிலில் போட்டிகளை விலக்கி விடுவீர்கள். அதேநேரம் அகலக்கால் வைத்து கடன் வாங்கி முதலீடுகளைச் செய்ய வேண்டாம்.  குழந்தைகள் மேல் படிப்புக்கு அவர்களைத் தயார் செய்வீர்கள். சிலருக்கு கை, கால், மூட்டு வலி உண்டாகி தீரும். கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் கண்டு விலகி விடுவீர்கள். அரசு வேலைகள்  அனுகூலமாக நடக்கும். முக்கிய விஷயங்களில் தந்தையின் ஆலோசனைக் கேட்டு நடப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீஅனுமனை வழிபடவும்.

*******

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலகட்டத்தில் வாழ்க்கையில் முன்னேற பல  வழிகளை யோசிப்பீர்கள். " வெற்றி வேண்டுமா?  போட்டு பாரடா எதிர்நீச்சல் " என்ற பாட்டை போல உங்கள் அனைத்து கடினமான காரியங்களையும் சரியாக திட்டமிட்டு வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். சிலருக்கு அரிய வாய்ப்புகள் தேடி வரும் .  அவைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.  தொழிலை விரிவு படுத்துவீர்கள்.  

அனாவசியமான பீதி, விரக்திகளில்  இருந்து விடுபட்டு தெளிவடைவீர்கள்.  புதிய நம்பிக்கை பிறக்கும்.  வருமானம் சீராக இருப்பதால் திடீர் செலவுகளை சமாளித்து விடுவீர்கள்.  உறவினர்கள் இல்லம் தேடி வந்து மகிழ்ச்சியான செய்திகளை பரிமாறிக் கொள்வார்கள்.  கையிருப்புப் பொருட்களை தக்கபடி முதலீடு செய்வீர்கள்.  இல்லத்தில் திருமணமும் மழலை பாக்கியமும் உண்டாகும்.  குழந்தைகளின் விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள்.  

ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். நிதானமாகவும் தெளிவுடன் பேசுவீர்கள்.  பங்கு வர்த்தகத்தின் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். தொழிலில் நெடுநாள் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளுக்கு ஆக்கப்பூர்வமான முடிவை காண்பீர்கள்.  உடல் ஆரோக்கியம் மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்றுக் கொள்வீர்கள்.  சில முக்கிய பயணங்களை செய்ய நேரிடும்.  சிறிய அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதிக சோர்வு உண்டாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். பழைய கெட்ட பழக்கங்களை கைவிட்டு புதிய நல்ல பழக்கங்களுக்கு மாறுவீர்கள்.  இதனால் உடலிலும் மனதிலும் குதூகலம் உண்டாகும். 

அசையா சொத்துகளுக்கு தேவையான காப்பீடு செய்வீர்கள்.  அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்ந்து யோகத்தையும் பெறுவீர்கள்.  அதே நேரம் முன்கோபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் சற்று நிதானித்து நிதானத்துடன் பேசவும்.  உங்களின் திறமைகள் அனைவரும் பாராட்டும் வகையில் அமையும்.  புதிய தொழில்நுட்பங்களை நிபுணர்களிடமிருந்து கற்று அவைகளை உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் 
கொள்வீர்கள்.  

குருபகவானின் சஞ்சாரம்

குருபகவான் 22}04}2023 முதல் மேஷ ராசியில் நேர்கதியில்  04}09}2023  வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் தொழிலில் சாதகமான வாய்ப்புகளை பெறுவீர்கள்.  குடும்பத்தில் அன்பு பாசம் மேலோங்கும்.  சமூகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.  குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணம் கைவந்து சேரும்.  குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  வாழ்க்கை துணை வழியில் எதிர்பாராத நிம்மதியான சூழல் நிலவும்.  சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.    முக்கிய முடிவுகளை சிந்தித்து எடுப்பீர்கள்.  உங்கள் நிர்வாகத் திறனும் கூடும்.  போட்டியாளர்களுக்கும் சரியான பதிலடி கொடுப்பீர்கள்.   குடும்பத்தில் இருந்த பங்காளி சண்டைகள் தீர்ந்து விடும்.

05}09}2023 முதல் 30}12}2023  வரை  குருபகவான் மேஷ ராசியிலேயே வக்கிரகதியிலேயே (பின்னோக்கி) சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் புதிய பொறுப்புகளில் கவனமாக ஈடுபடுவீர்கள்.  முக்கிய முடிவுகளிலும் நிதானத்துடனும் செயல்படவும். முயற்சிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி பெறும்.  தெய்வ பலத்தை கூட்டி கொள்வீர்கள்.  உங்கள் தேக ஆரோக்கியம் சீராக இருந்தாலும், இரத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் ஜுரம் போன்றவைகளும் தோன்றி மறையும்.

31-12-2023 முதல் தமிழ்ப் புத்தாண்டு இறுதிவரை குருபகவான் ரிஷப ராசியை நோக்கி நேர்கதியில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் பழக்க வழக்கங்களில் உயர்வும், மேன்மையும், உதார
குணமும் உண்டாகும்.  அரசு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும்.  அரசு அதிகாரிகளின் ஆதரவும் தக்க நேரத்தில் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வேகத்தோடு விவேகத்தையும் கூட்டிக் கொள்வீர்கள்.  உங்களுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் உங்களின் ஆதரவாளராக மாறுவார்கள்.

ராகு கேது பகவான்கள் 28-11-2023 வரை தைரிய ஸ்தானம் மற்றும் பாக்யஸ்தானத்திலும், பிறகு ஆண்டு இறுதி வரை குடும்ப ஸ்தானம் மற்றும் அஷ்டமஸ்தானத்திலும்  சஞ்சரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில்  ஒரு முக்கிய விஷயத்திற்கு காரணம் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பீர்கள்.  இதனால் அனைத்து விஷயங்களிலும் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.  குழந்தைகள் பற்றிய சிறு கலக்கமும் உண்டாகும்.  முக்கிய முடிவுகள் எடுக்கத் தயங்குவீர்கள்.   கையிருப்பு பொருட்கள் மீதுள்ள அக்கறையும் குறையும்.  

தங்க நகைகளை அடமானம் வைத்து புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். மற்றபடி உங்களின் மறைமுகத் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் முன் கோபமும், பிடிவாத குணமும் படிப்படியாக குறையும்.  உங்கள் நன்னடத்தைகளினால் குடும்ப பாரம்பர்யத்தை காப்பீர்கள்.  கொடுத்த வாக்கையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். சிலர் வீடு மாற்றம் செய்ய நேரிடும். அதே நேரம் இழப்புகள் ஏற்பட தொடங்கும் போதே விழிப்படைந்து, காரணத்தை அறிந்து சரி செய்து விடுவீர்கள்.

பரிகாரம்: அம்மனை வழிபடவும்.

*******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சித்திரை முதல் புரட்டாசி வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் போராட்டம் மறைந்து அமைதியாக ஈடுபடுவீர்கள்.  உங்கள் எண்ணங்களை வலிமையாக எடுத்துக் கூறி மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்கள்.   கடினமாக உழைத்து அதற்கு நல்ல வருமானமும் பெறுவீர்கள்.  குடும்பத்தில் உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். செய்தொழிலில் புதிய முதலீடுகளைச் செயல்படுத்துவீர்கள். வைராக்கியத்துடன் திட்டங்களைப் படிப்படியாகச் செயல்படுத்துவீர்கள். நண்பர்களையும், உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் தட்டிக் கொடுத்துச் செல்வீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் மீண்டும் இணைவார்கள்.  வாழ்க்கையிலும் நம்பிக்கை துளிர்விடும். உங்கள் அறிவுரைகளையும் அனைவரும் கேட்பார்கள்.

ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் விரயங்கள் மாறி வருமானம் கையில் தங்கும். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களுக்கு உங்களால் இயன்றவரை ஆதரவாக இருப்பீர்கள்.  இதனால் குடும்பத்தில் இணக்கமும், குதூகலமும் நிறையும். உங்கள் செயல்களில் வேகம் குறைந்து விவேகம் கூட காண்பீர்கள். கவர்ச்சிகரமான தோற்றப் பொலிவும் சிந்தித்துப் பேசும் ஆற்றலும் உண்டாகும். எத்தகைய கடினமான சூழ்நிலைகளில் இருந்தாலும் கடைசி நேரத்தில் மீண்டு விடுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்
களின் ஆசிகளையும் பெறுவீர்கள்.  உடல்நலம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும்.  யோகா, தியானம் போன்றவைகளை தவறாமல் செய்வீர்கள். 

பொதுச்சேவையில் நாட்டம் அதிகரிக்கும்.  அதற்குரிய பாராட்டுகளையும் பெறுவீர்கள். அரசிடம்  எதிர்பார்த்த உதவிகளைப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரக் காண்பீர்கள். வீண் அபவாதங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அதனைச் செய்வார்கள். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். கெட்டவர்களின் சகவாசத்தை நீக்கி விடுவீர்கள். நண்பர்கள் வகையில் இருந்த பொல்லாப்புகள் நீங்கும்.

குரு பகவான் சஞ்சாரம்
குரு பகவான் 22.4.2023 முதல் மேஷ ராசியில் நேர்கதியில் 4.9.2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள்.  கூட்டுத் தொழிலிலும் அதிக லாபத்தைக் காண்பீர்கள். பூர்விகச் சொத்துகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகள் சீர்படும்.  உங்களின் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் யோசித்து ஈடுபடுவீர்கள். உங்கள் வார்த்தைகளில் தீர்ப்புகள் வெளிப்படும்.  வருமானம் சீராக இருப்பதால் சேமிப்பில் அக்கறையைக் காட்டுவீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்திலும் உயர்வடைவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங்கள் தேடிவரும். வாழ்க்கையில் இருந்த சலிப்புகளும் மறையும்.

5.9.2023 முதல் 30.12.2023 வரை குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்கிர கதியில் (பின்னோக்கி) சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சுய முன்னேற்றத்துக்குப் பாடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களால்தேவையான நன்மைகளைப் பெறுவீர்கள்.    பண விரயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.  குடும்ப சுப நிகழ்ச்சிகளில் உங்கள் மதிப்பு, மரியாதைகள் உயரக் காண்பீர்கள். மனச்சோர்வு நீங்கி தெளிந்த நீரோடை போல் காட்சியளிப்பீர்கள். 

31.12.2023 முதல் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு இறுதி வரை குரு நேர்கதியில் ரிஷப ராசியை நோக்கி சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். உங்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறக் காண்பீர்கள்.   அதோடு முக்கிய விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டு. உங்கள் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து வெற்றி பெறுவீர்கள்.  இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வயிற்று வலியிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். 

ராகு , கேது பகவான்கள் 28.11.2023 வரை குடும்ப ஸ்தானம் , அஷ்டம ஸ்தானத்திலும் , அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரை உங்கள் ராசி, களத்திர நட்பு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.  இந்க காலகட்டத்தில் உங்களை அறிந்துகொண்டு மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். தாயின் மூலம் எதிர்பாராத பண வரவு உண்டு. தாய்வழி மூதாதையர்களின் சொத்தும் கிடைக்கும். உங்களின் பேச்சுத்திறமை கூடும். நகைச்சுவையாகவும், அதேசமயம் பொருள்படவும் பேசுவீர்கள்.  

தோல்விகளிலிருந்து வெற்றி பாதைக்குத் திரும்புவீர்கள். உங்களின் பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொள்வீர்கள். ஆன்மிகத்திலும், கோயில் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். உங்களின் சூட்சும புத்தியால் எதிர்காலத்தில் நடக்கப் போகும் விஷயங்களை அறிந்து அதற்கேற்ப உங்கள் நடைமுறைகளை மாற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com