
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சி அளித்தார்.
இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த மார்ச் 3ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர்.
முக்கிய திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஏழாம் நாளை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலை 5 மணியளவில் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேர்ந்தார்.
நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.