காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ஐந்தில் ஒன்றாகவும், தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் முதலாவதாகவும் உள்ள தலம் காஞ்சிபுரம். இரண்டு கண்களிலும் பார்வையை இழந்த சுந்தரர், இத்தல இறைவன் ஏகாம்பரநாதரை வழிபட்டு பதிகம் பாடி, இரண்டு கண்களில் இடது கண் பார்வையை மீண்டும் பெற்ற தலம். அந்த வகையில், இடது கண்ணில் பார்வைக் கோளாறு, நோய் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம் காஞ்சிபுரம்.
இறைவன் பெயர்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி பெயர்: காமாட்சி அம்மன் |
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஆறும், திருஞானசம்பந்தர் பதிகம் நான்கும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 12 பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது?
சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது காஞ்சிபுரம். சென்னையில் இருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் அதிகம் இருப்பதால், இத்தலத்துக்குச் செல்வது மிகவும் எளிது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், தென் மாநிலங்களின் முக்கிய ஊர்களில் இருந்தும் காஞ்சிபுரத்துகுப் பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், |
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்
சுந்தரர் கண்ணொளி பெற்ற வரலாறு
சுந்தரர், திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்துவந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை மணந்துகொள்ள விரும்பி, இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி, சுந்தரரை மணந்துகொள்ளும்படிக் கூறினார். சுந்தரர் ஏற்கெனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்துகொண்டிருந்தார். ஆகையால், என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர், ‘ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான், ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும், இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரியமாட்டேன் என்ற சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது’ சத்தியம் செய்யும் சமயத்தில், சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்துகொள்ளும்படியும் இறைவனிடம் கூறினார்.
இந்த விவரத்தை, சங்கிலி நாச்சியாரிடம் போய் இறைவன் கூறிவிட்டார். எனவே, திருமணம் நடக்கும் சமயம், மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி, மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி சுந்தரரை சங்கிலி நாச்சியார் கேட்டுக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து, ‘என்றும் உன்னைப் பிரியமாட்டேன்’ என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்டார்.
சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்துகொண்டு, பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து, திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறிப் புறப்பட்டதால், சுந்தரர் தனது இரு கண் பார்வையையும் இழந்தார். அப்படிப் பார்வை இழந்த கண்களில் இடது கண் பார்வையை, காஞ்சிபுரம் தலத்தில் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டுப் பதிகம் பாடி சுந்தரர் திரும்பப் பெற்றார்.
பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘காணக் கண் அடியேன் பெற்ற வாறே’ என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார். இந்நாளிலும், இறைவன் ஏகாம்பரேஸ்வரரை மனமுருகி வழிபட்டு, சுந்தரரின் பதிகத்தைப் பல அன்பர்கள் முழு நம்பிக்கையுடன் ஓதி, இடது கண் பார்வைக் கோளாறுகள் நீங்கப்பெற்று வருகின்றனர்.
‘நகரேஷு காஞ்சி’ என்று மகாகவி காளிதாசனால் போற்றப்பட்ட திருத்தலம் காஞ்சிபுரம். வரலாற்றுப் பெருமையும், இலக்கியங்களில் இடம்பெற்ற பெருமையும் உடையது காஞ்சிபுரம். கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடைய காஞ்சிபுரம், முக்தி தரும் தலங்களாக கருதப்படும் ஏழு நகரங்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில், பூமித் தலமாக விளங்குவது காஞ்சிபுரம்.
இங்கு, பிருத்வி லிங்கமாக ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். மூல லிங்கம் மணலால் ஆனதால், இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆலயம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஐந்து பிராகாரங்களை உடைய இந்த ஆலயத்தின் ராஜகோபுரம், சுமார் 190 அடி உயரமும் 9 நிலைகளை உடையதாகவும் அமைந்துள்ளது. நான்காம் பிராகாரத்திலுள்ள ஆயிரம் கால் மண்டபம், பல சிற்ப கலை நுணுக்கங்களைக் கொண்டது. ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் ஈசான மூலையில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது
தல வரலாறு
ஒருமுறை, திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும், அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காகப் பூவுலகுக்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கித் தவம் இருக்குமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்தப் பூவுலகுக்கு வந்து புனிதத் தலமான இந்தக் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார்.
அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படிச் செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி, லிங்கத்தை அம்பிகை தழுவிக் கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவியபோது, இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவனை இறைவி வழிபட்ட இந்த வரலாறு, திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர்.
இவ்வாறு இறைவனை அம்பிகை கட்டித் தழுவிக்கொண்டதை சுந்தரர் தனது பதிகத்தில் (71-வது பதிகத்தில்) அழகாகக் குறிப்பிடுகிறார். இதோ அந்தப் பாடல்…
எள்கலின்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள்புரிந்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்துகொண்ட சிவபெருமான், அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக்கொண்டு 32 அறங்களைச் செய்யப் பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற பெயரில் காமக்கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இத்தலத்தின் தலவிருட்சமான மாமரம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்து அருளினார். இம்மாமரத்தை வலம் வரலாம்.
மாவடியைத் தொழுது பின் திரும்பிவந்து, பிராகாரத்தில் வலம் வரும்போது, சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து, வலதுபுறம் படியேறிச் சென்றால், ஏலவார் குழலி என்றழைக்கப்படும் அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது. இதனருகில், ‘மாவடிவைகும் செவ்வேள்’ சந்நிதி உள்ளது. குமரகோட்டம் என்னும் பெயரில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் தனிக்கோயில் உள்ளது. இருந்தாலும், கந்தபுராணத்தில் வரும் ‘மூவிரு முகங்கள் போற்றி’ எனும் பாடலில் வரும் ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’ என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரே ஆவார். இச்சந்தியில், வள்ளி தெய்வயானையுடன் கூடிய உற்சவத் திருமேனி முன்னால் இருக்க, பின்புறம் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன.
ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற தலம் இதுவாகும். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த லிங்கங்கள் இருக்கின்றன. அவை முறையே வெள்ளக் கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
108 வைணவ திவ்யதேசங்களில், காஞ்சிபுரத்தில் மட்டுமே 15 திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது. கச்சி மயானம் என்கிற ஒரு தேவார வைப்புத் தலமும் இக்கோவிலின் உள்ளே சுவாமி சந்நிதி கொடி மரத்தின் முன் உள்ளது. மேலும் பல சந்நிதிகளும், சிற்பங்களும், மண்டபங்களும் உள்ள இந்த ஆலயத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நேரில் சென்று ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு தொழுது தரிசிக்க வேண்டும்.
சுந்தரர் கண் பார்வை பெற பாடிய திருப்பதிகம் (7-ம் திருமுறை)
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந் தான் பெரிதும் உடையானைச்
சிந்திப் பாரவர் சிந்தையுள் உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான் உம்பர் கோனைப்
பற்றினார்க்கு என்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக் கொண்டானை
அற்ற மில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
திரியும் முப்புரந் தீப்பிழம்பாகச்
செங்கண் மால் விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்த்து உகந்தானைக்
காமனைக் கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாமுகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுர மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே
இந்த தலத்தைப் பற்றி சுந்தரர் இயற்றிய தேவாரம் - பாடியவர் கரூர் சுவாமிநாதன்
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>Picture courtesy : www.shivatemples.com</strong></p>