வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அகில இந்திய கபடி: ஐ.சி.எஃப்., மதுரை அணிகள் சாம்பியன்

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கபடிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை ஐ.சி.எஃப். அணியும், மகளிர் பிரிவில் மதுரை சக்தி டைல்ஸ்

News image
Updated On :2 மார்ச் 2013, 2:47 am IST

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கபடிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை ஐ.சி.எஃப். அணியும், மகளிர் பிரிவில் மதுரை சக்தி டைல்ஸ் அணியும் முதலிடத்தைப் பிடித்தன.

முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் அகில இந்திய மின்னொளி கபடிப் போட்டி பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 5 நாள் நடைபெற்றது.

ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொண்டன.

தென் கொரியவைச் சேர்ந்த ஓர் அணி, காட்சிப் போட்டியில் பங்கேற்றது. இறுதிப் போட்டிகள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றன.

ஆடவர் இறுதி ஆட்டத்தில் சென்னை ஐ.சி.எஃப். அணி 26-11 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ரெட் ஆர்மி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மதுரை சக்தி டைல்ஸ் அணி 44-41 என்ற புள்ளிகள் கணக்கில் விசாகப்பட்டினம் சாய் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஆடவர் அரையிறுதியில் தோல்வி கண்ட தமிழ்நாடு காவல் மற்றும் இந்திய கடற்படை அணிகள் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டன. இதேபோல் மகளிர் அரையிறுதிப் போட்டியில் வீழ்ந்த சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி மற்றும் ஹரியாணா அணிகள் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டன.

ஆடவர் பிரிவில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்ட சென்னை ஐ.சி.எஃப். வீரர் மணிகண்டனுக்கு மோட்டார் சைக்கிளும், மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட சக்தி டைல்ஸ் அணியைச் சேர்ந்த மங்கையர்க்கரசிக்கு மொபெட்டும் பரிசாக வழங்கப்பட்டன.

சாம்பியன் பட்டம் வென்ற இரு அணியினருக்கும் தமிழக முதல்வர் மூலம் பரிசு வழங்கப்படும் என்று கூறிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், அந்த இரு அணியினருக்கும் கைக்கடிகாரங்களை பரிசாக அளித்தார்.

சென்னை ஐ.சி.எஃப். அணிக்கு ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து, 465, சக்தி டைல்ஸ் அணிக்கு ரூ.65 ஆயிரத்து 65 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2-வது இடத்தைப் பிடித்த இந்திய ரெட் ஆர்மி அணிக்கு ரூ. 91 ஆயிரத்து 65, 3-வது இடத்தைப் பிடித்த தமிழ்நாடு காவல், இந்திய கடற்படை அணிகளுக்கு தலா ரூ.55 ஆயிரத்து 65 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

 மகளிர் பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்த விசாகப்பட்டினம் சாய் அணிக்கு ரூ. 55 ஆயிரத்து 65, 3-வது இடத்தைப் பிடித்த சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணி, ஹரியாணா அணிகளுக்கு தலா ரூ.32 ஆயிரத்து 65 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

 பரிசுகளை, பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், கைத்தறித் துறை அமைச்சர் எஸ். சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினர். விழாவுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.

   பரிசளிப்பு விழாவில், திருநெல்வேலி மேயர் விஜிலா சத்யானந்த், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.சின்னத்துரை, மாநகராட்சி துணை மேயர் பி. சேவியர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் விஜயகுமார், மாநகரச் செயலர் ஏசாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.