உலகக் கோப்பை டி20: 47 ரன்களில் நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா

இன்று தொடங்கிய இருபது ஒவர் உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
உலகக் கோப்பை டி20: 47 ரன்களில் நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா
Published on
Updated on
3 min read

இன்று தொடங்கிய இருபது ஒவர் உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

126 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி  18.1 ஒவர்களில் 79 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்தியாவுக்கு முதல் ஒவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. மெக்கல்லம் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஒரு ரன்னுக்கு ஆட்டம் இழந்தார் ஷிகர் தவான்.

மூன்றாவது ஒவரை வீசினார் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சேன்ட்னர். இறங்கிவந்து அடிக்க முயன்ற ரோஹித் சர்மா, பந்தை தவறவிட்டார். பந்தை பிடிப்பதில் சற்று தடுமாறினாலும் நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் ரோஞ்ச் பின்னர் சுதாரித்து, சர்மாவை ஸ்டம்பிங் செய்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து உள்ளே வந்த ரெய்னா தான் சந்தித்த இரண்டாவது பந்தில் கப்டிலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்த ஒவரில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக களம் கண்ட யுவராஜ் தொடக்கம் முதலே தடுமாறினார். தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளிலும் ரன் ஏதும் எடுக்காத யுவராஜ் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். எனினும், அடுத்த பந்தில், பந்துவீசிய மெக்கலமிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் யுவராஜ். ஐந்து ஒவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் கேப்டன் தோனி, துணை கேப்டன் விராட் கோலியுடன் இணைந்தார். இருவரும் சிறிது நேரம் இந்திய அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர்.

ஒன்பதாவது ஒவரை வீசிய சோதியின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் ரோஞ்சியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. அவர் 27 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு பிறகு இந்திய அணியின் சரிவு தொடங்கியது.

பாண்டியாவும், ஜடேஜாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  11 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து உள்ள வந்த அஸ்வின் விக்கெட் விழுவதை தடுத்து நிறுத்தினார்.

கடைசி 5 ஒவரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 66 ரன்கள் தேவைப்பட்டது. சோதி பந்துவீச்சில்  அஸ்வின் 10 ரன்களில் வெளியேற இந்தியாவின் வெற்றி கனவு தகர்ந்தது.

கடைசி மூன்று ஒவர்களில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஒவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தோனி, 4-வது பந்தில் லாங்-ஆன் திசையில் மெக்கலத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 19-வது ஒவரின் முதல் பந்தில் நெஹ்ரா டக் அவுட்டாக இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 79 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

விக்கெட்டை சரியாக கணித்து மூன்று ஸ்பின்னர்களுடன் களம் இறங்கிய நியூஸிலாந்து அணி சாதித்து காட்டியது. சுழற்பந்தை வெற்றிகரமாக எதிர்கொள்பவர்கள் என்று பெயர் பெற்ற இந்திய அணி வீரர்களில் 9 பேர் சுழல் பந்தில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. மிட்செல் சேன்ட்னர் 4 ஒவர்கள் பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின. நாகபுரியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தெரிவு செய்தார்.  ஆச்சரியப்படும் வகையில், நியூஸிலாந்து அணி இந்த ஆட்டத்தில் 3 சுழற்பந்து வீச்சாளர்களை  சேர்த்திருந்தது.

கேப்டன் வில்லியம்சன் மார்டின் கப்டில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். அஸ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை தொடங்கினார் கப்டில். எனினும், இரண்டாவது பந்தை ஸ்வீவ் செய்ய முயன்ற போது, பந்து கால்காப்பில் பட்டது. அஸ்வினின் நீண்ட முறையீட்டுக்குப் பிறகு நடுவர் தர்மசேனா அவுட் வழங்கினார்.  கப்டிலுக்கு அதிர்ஷ்டமில்லை.  டிவி ரீப்ளேவில் பந்து விக்கெட்டை விட்டு விலகி செல்வது தெளிவாக தெரியவந்தது.

மூன்றாவது வீரராக வந்த முன்ரோ தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸர் விளாசினார். எனினும், அவர் நெடுநேரம் நிலைக்கவில்லை. நெஹ்ரா வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதற்கு பின்பு உள்ளே வந்த ஆண்டர்சனும், வில்லியம்சனும் நிதானமாக ரன்களை குவித்தனர். இதையடுத்து ரெய்னாவை பந்து வீச அழைத்தார் தோனி. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் தோனி்யாவில் 'ஸ்டம்ப்'  அவுட்டானார்  வில்லியம்சன்.  16 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதையடுத்து விளையாட வந்த அனுபவ வீரர் ராஸ் டெய்லரை அற்புதமான ரன்-அவுட் மூலம் வெளியேற்றினார் ரெய்னா. அவர் வீசிய பந்தை ஆண்டர்சன் நேராக அடித்தார். அதை பாய்ந்து பிடித்தார் ரெய்னா. அப்போது பவுலிங் கீரிஸை விட்டு வெளியே நின்ற ராஸ் டெய்லரை நொடி நேரத்தில் ரன்-அவுட் செய்தார் ரெய்னா.  அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ஜடேஜா வீசிய 12-வது ஒவரின் போது தோனிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அந்த ஒவரில் நியூஸிலாந்து அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.

இதையடுத்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஆண்டர்சனை வெளியேற்றினார் பூம்ரா. யார்கர் பந்தை பின்புறமாக அடிக்க முயன்ற ஆண்டர்சன் 'மிடில் ஸ்டம்பை' பறிகொடுத்தார். அவர் 42 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகளும் அடங்கும். அதன் பின்பு வந்த நியூஸிலாந்து வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை.

நியூஸிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பந்து வீசியவர்கள் பாண்டியா தவிர அனைத்து பந்து வீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com