இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியுடன் கே.எல்.ராகுல் இணையவில்லை. ரவீந்திர ஜடேஜா அணியினருடன் இணைந்துள்ளார். போட்டியில் விளையாடும் அளவிற்கு கே.எல்.ராகுல் உடல் தகுதியுடன் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுலுக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. உடல் தகுதியின் அடிப்படையில் கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறுவர் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.