இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயதேயான இளம் வீரர் பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக பங்கேற்கவுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் இந்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், 48 அணிகள் பங்கேற்று 16 நகர்களில் 104 போட்டிகள் நடைபெறுகின்றன.
23-வது கால்பந்து தொடர் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில், இந்தத் தொடரில் 19 வயதேயான கேரளத்தைச் சேர்ந்த தாஹ்சின் ஜம்ஷித், கத்தார் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தாஹ்சின் ஜம்ஷித்தின் தந்தையும் கேரளத்தில் பிரபலமான கால்பந்து வீரருமான கோழிக்கோடு தலசேரியைச் சேர்ந்த ஜம்ஷித் தச்சன்கண்டி, 1996 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் தோஹாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக விளையாடாவிட்டாலும் உள்ளூரில் மிகவும் பிரபலமானவராகக் கருதப்படுகிறார். இவர் தற்போது தனது மகனுக்குப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் உள்ளார். கத்தாரின் இளம் கால்பந்து அகாடமி மூலம் வளர்ந்து, தற்போது அல்-துஹைல் எஸ்சி அணிக்காக விளையாடி வருகிறார் ஜம்ஷித்.
கத்தார் அணியில் 26 பேர் கொண்ட வீரர்கள் விவரம் நேற்று (ஜூன் 2) வெளியிடப்பட்டது. இந்த அணியில் பிஃபா உலகக் கோப்பையில் விளையாடும் முதல் இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர் என்ற வரலாற்றைப் படைக்கத் தயாராக உள்ளார் தாஹ்சின் ஜம்ஷித்.
கேரளத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு கத்தார் தலைநகர் தோஹாவில் பிறந்தவர் தாஹ்சின் ஜம்ஷித். இவர் இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரண்டு நாடுகளின் கடவுச்சீட்டையும் வைத்திருப்பதால், அவர் கத்தார் நாட்டிற்காக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
Summary
Jamshid Thachankandy left Thalassery for Doha in 1996. His 19-year-old son Tahsin is now in Qatar's squad for the FIFA World Cup in the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







