மே.இ. அணிக்கு எதிராக இலங்கை அணி அபார பேட்டிங்!

மே.இ. அணிக்கு எதிராக இலங்கை அணி அபார பேட்டிங்!

குசால் பெரேராவும் கருணாரத்னேவும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்... 
Published on

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை 250 ரன்களை எட்டாத இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பெரிய ஸ்கோரை எடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இங்கிலாந்து அணியிடம் இந்தியா நேற்று தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலைமை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அரையிறுதிக்கான போட்டியில் இல்லை. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். 6 புள்ளிகளுடன் இலங்கை அணி, புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்திலும் மே.இ. அணி 3 புள்ளிகளுடன் 9-ம் இடத்திலும் உள்ளன.

தொடக்க வீரர்களான குசால் பெரேராவும் கருணாரத்னேவும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இதனால் இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது. கேப்ரியல் வீசிய 11-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை அடித்தார் குசால் பெரேரா. நன்கு விளையாடி வந்த கருணாரத்னே, ஹோல்டர் பந்துவீச்சில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதமெடுத்து பெரிய இன்னிங்ஸை நோக்கி விளையாடி வந்த குசால் பெரேரா, வீணாக ரன் அவுட் ஆகி, 64 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு குசால் மெண்டிஸும் அவிஷ்கா ஃபெர்ணாண்டோவும் சிறப்பாக விளையாடினார்கள். 25 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி, 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. 

41 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த குசால் மெண்டிஸ், ஆலனின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். 57 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் அவிஷ்கா. 

இலங்கை அணி, 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அவிஷ்கா 74, மேத்யூஸ் 26 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com