
பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டாம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
நாடு முழுவதும் வெடித்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸை ஆலோசகராகக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலைக்குற்ற வழக்குப் பதியப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ரஃபிக்குல் இஸ்லாம் என்பவர் டாக்காவில் உள்ள காவல் நிலையத்தில் தனது மகன் ரூபெல், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது கொலை செய்யப்பட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வங்கதேசத்தின் அப்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகீப் அல் ஹசன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
போராட்டம் நடைபெற்றபோது, ஷகீப் அல் ஹசன் வங்கதேசத்தில் இல்லை. ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 9 வரை ஷகீப் அல் ஹசன் குளோபல் கனடா டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாக ஜூலை மாதத்தில் அவர் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடினார்.
சம்பவம் நடந்த நாளன்றோ அல்லது போராட்டம் நடைபெற்ற எந்த ஒரு நாள்களிலோ ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்தில் இல்லை. இருப்பினும், அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.