இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
Published on
Updated on
2 min read

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். கடந்த இரு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதுமின்றி 0 ரன்கள், அபிஷேக் சர்மா (4 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, திலக் வர்மா மற்றும் அக்‌ஷர் படேல் ஜோடி சேர்ந்தனர். திலக் வர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், அக்‌ஷர் படேல் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தது. இருப்பினும், அக்‌ஷர் படேல் 27 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரிங்கு சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. ஹார்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஸீ, ஆண்டைல் சைம்லேன், அய்டன் மார்க்ரம் மற்றும் பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.

ரியான் ரிக்கெல்ட்சன் 13 ரன்களிலும், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 24 ரன்களிலும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

கடந்த ஆட்டத்தைப் போன்று விக்கெட் கீப்பர் கிளாசன்(2 ரன்) மற்றும் அதிரடி ஆட்டக்காரர் மில்லர்(0) இருவரும் வருண் சக்கரவர்த்தியிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் பாட்னர் ஷிப் அமைத்த கோட்ஸீ, திர்ஷ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

திர்ஷ்டன் ஸ்டப்ஸ் 47 ரன்களும், கோட்ஸீ 9 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

4 ஓவர்கள் பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது வருண் சக்கரவர்த்திக்கு டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாகவும் பதிவானது.

4 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com