இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும்; பாகிஸ்தான் பயிற்சியாளர் நம்பிக்கை!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்களை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பந்துவீச்சாளர்கள் வென்று கொடுப்பார்கள்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று கொடுப்பார்கள் என பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரருமான ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று கொடுப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள். அதற்கு அவர்களது சாதனைகளே சான்று. பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் இவர்கள் நால்வரும் இந்திய அணிக்கு சவாலளிப்பார்கள். அண்மைக் காலங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியைத் தழுவினாலும், ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்றார்.
இந்தியாவுக்கு எதிராக கடந்த 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.