
இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணியின்ஜோஸ் பட்லர் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனால், இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக 26 வயதான இளம்வீரர் ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் ஜெட்டா நகரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் தில்லி கேப்பிடல்ஸ் அணி, ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இருப்பினும், அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால், ஐபிஎல் புதிய விதிகளின்படி அவருக்கு 2 ஆண்டுகள் தொடரில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு அறிமுகமானதிலிருந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். மேலும், பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் முச்சதம் விளாசி அசத்தியிருந்தார்.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பட்லர் விளையாடாததால், அணியை வழிநடத்திய புரூக் தலைமையிலான இங்கிலாந்து 2-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை அணி மற்றும் யங் லையன்ஸ் அணியின் கேப்டனாக ஹாரி புரூக், இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 816 ரன்கள் குவித்திருக்கிறார். அவர் அதிகபட்சமாக 110 ரன்கள் குவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள புரூக் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியிலும் அங்கம் வகித்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.