பயத்தின் காரணமாக வியான் முல்டர் 400 ரன்கள் குவிக்க முயற்சிக்கவில்லை: கிறிஸ் கெயில்

பயத்தின் காரணமாக வியான் முல்டர் 400 ரன்கள் குவிக்க முயற்சிக்காததாக மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
wiaan mulder
வியான் முல்டர்படம் | ஐசிசி
Published on
Updated on
2 min read

பயத்தின் காரணமாக வியான் முல்டர் 400 ரன்கள் குவிக்க முயற்சிக்காததாக மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் 367* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்தும் அதனை செய்யாமல், தென்னாப்பிரிக்க அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். லெஜண்டரி வீரரான பிரையன் லாராவின் மீதுள்ள மரியாதையின் காரணமாக அவரது 400 ரன்கள் சாதனையை முறியடிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதனையே செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.

பயத்தில் பெருந்தவறு செய்துவிட்ட வியான் முல்டர்

டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்கள் குவித்த வீரர் என்ற பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பயத்தின் காரணமாக வியான் முல்டர் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

chris gayle
கிறிஸ் கெயில் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவர் கண்டிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறேன். அவர் 400 ரன்கள் எடுப்பாரா அல்லது ஆட்டமிழந்து விடுவாரா என்பதை நம்மால் கூற முடியாது. ஆனால், 367 ரன்கள் எடுத்திருக்கும்போது டிக்ளேர் செய்துவிட்டார். டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் கிடைக்கும்.

பிரையன் லாரா மிகப் பெரிய லெஜண்ட். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை அவரிடமே இருப்பதற்கு அவர் மிகவும் தகுதியானவர். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்கள் குவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால், கண்டிப்பாக நான் 400 ரன்கள் குவிப்பேன். இதுபோன்ற விஷயங்கள் அடிக்கடி நடக்காது.

அடுத்த முறை எப்போது நீங்கள் முச்சதம் விளாசுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாது. அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரையன் லாராவிடம் இந்த சாதனை இருக்க வேண்டும் என முல்டர் நினைத்தது அவரது பெருந்தன்மையான மனதைக் காட்டுகிறது. ஒருவேளை அந்த நேரத்தில் 400 ரன்கள் குவிக்க முடியுமா என நினைத்து அவர் அச்சமடைந்திருக்கலாம்.

எதிரணி யாராக இருந்தாலும் கிரிக்கெட் என்பது ஒன்றுதான். சில நேரங்களில் ஜிம்பாப்வே போன்ற அணிகளிடம் உங்களால் ஒரு ரன் கூட குவிக்க முடியாது. அதனால், எதிரணி யார் என்பது முக்கியமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரிடம் 100 ரன்கள் எடுத்தாலும், அதற்கு பெயர் சதம்தான். அதேபோல, இரட்டைச் சதம், முச்சதம் மற்றும் 400 ரன்களை எந்த அணிக்கு எதிராக குவித்தாலும் அது மதிக்கப்படும். வியான் முல்டர் பயத்தினால் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார் என்றார்.

Summary

Former West Indies batsman Chris Gayle has said that Wiaan Mulder did not attempt to score 400 runs out of fear.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com