
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
ஜோ ரூட் சதம்; பும்ரா 5 விக்கெட்டுகள்
இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 11) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ஜோ ரூட், டெஸ்ட் போட்டிகளில் அவரது 37-வது சதத்தைப் பதிவு செய்தார். இருப்பினும், அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின், ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடான் கார்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த பார்ட்னர்ஷிப்பை சிராஜ் உடைத்தார். ஜேமி ஸ்மித் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரைடான் கார்ஸ் 83 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இறுதியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், லார்ட்ஸில் முதல் முறையாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருடைய 15-வது 5 விக்கெட்டுகள் ஆகும். நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் முகமது சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
England were bowled out for 387 in the first innings of the third Test against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.